பல்கலைக்கழக  நியமனங்களில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு கடந்த அரைநூற்றாண்டு காலமாக இருந்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உயர்க்கல்வியில் ஆளுநரின் அதிகாரம் குறித்த விவாதம் மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது.


ஆளுநராக இருக்கும் ஒருவர்  பல்கலைக்கழகங்களின் வேந்தாராக இருக்கும் நடைமுறை காலனிய காலத்தில் இருந்தே உருவாகிறது. இந்தியாவில், தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும், உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் மேற்கத்திய தத்துவங்களை கொண்டு செல்லவும் ஆங்கிலேயர்கள் இந்த முறையை வடிவமைத்தனர்.  நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தபோதிலும், இந்தியாவில் அதே நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருவது ஆச்சர்யமான விஷயம்தான்.


சட்டம் சொல்வதென்ன? 


தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன.  மாநிலத்தின் ஆளுநராக இருக்கும் ஒருவர், மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருப்பார். பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பாளாராக துணை வேந்தர் இருப்பார். துணை வேந்தரை தேர்ந்தடுப்பதற்கான தேர்வுக் குழுவை மாநில அரசு அமைக்கும். இந்த குழு பெறப்பட்ட விண்ணப்பங்களை  பரிசீலித்து ஆளுநருக்குப் பெயரை பரிசீலனை செய்யும். ஆளுநர் இந்த பெயரை அரசுடன் கலந்தாலோசித்து  நியமனம் செய்வார். 



 


ஆனால், நடைமுறையில் இது பல்வேறு சிக்கல்களை உருவாக்கியுள்ளது. உதாரணமாக, கடந்த 1985-ஆம் ஆண்டு, தமிழக அரசுடன் கலந்தாலோசிக்காமல் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக எஸ்.கிருஷ்ணாசாமியை அப்போதைய ஆளுநர் சுந்தர் லால் குரானா நியமித்தார். இதற்கு, அப்போதைய அதிமுக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்டப் போராட்டத்தில் , மறைந்த அதிமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் அரங்கநாயகம்  முக்கிய பங்கு வகித்தார். மாநில அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆலோசனையைப் பெற்று, வேறு ஒரு பெயரை தமிழகர் அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. இருந்தாலும், கடைசி நேரத்தில் ஆளுநரின் நியமனத்தை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. சூரப்பா விவகாரத்தில் கூட துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநர் சம்பந்தப்பட்டது. அதில் அரசு தலையிட முடியாது என அதிமுக அரசு தெரிவித்துவிட்டது. 


மாநில அரசின் அறிவுரையை ஏற்காமல், அறிவுரையை கேட்காமல் துணைவேந்தரை ஆளுநர் நியமிக்கலாமா?   


இல்லை என்பதே நேர்மையான பதில் ; 


முதலாவதாக, நாடாளுமன்ற ஜனநாயக முறையை இந்தியா பின்பற்றி வருகிறது. இதில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்/ முதல்வர் தான் உண்மையான ஆட்சி அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். மாநிலத்தின் ஆட்சி அதிகாரம் ஆளுநரிடம் உற்றமைந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், முதல் அமைச்சரவைத் தலைவராகக் கொண்ட  அமைச்சரவையின் அறிவுரையின் பெயரிலே ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகமாக உள்ளது. எனவே, ஆளுநரின் அதிகாரம் மிகவும் பரந்துபட்டவை ஆயினும், பொதுவாக இவர் தன்னிச்சையாக செயல்படக்கூடாது என்று உச்சநீதிமன்றம் (Shamsher Singh & Anr vs State Of Punjab on 23 August, 1974) பல்வேறு தீர்ப்புகளில் உறுதிபடுத்தியுள்ளது.    


இரண்டாவதாக, ஒருவர் ஆளுநராக இருப்பதால் தான் (Ex-officio), பல்கலைக்கழகங்களின் வேந்தராக  உள்ளார். ஆளுநர் அமைச்சரவையின் அறிவுரையின் பெயரிலே ஆளுநர் செயல்பட  வேண்டும் என்றால், வேந்தர் பணியையும் அமைச்சரவையின் அறிவுரையின் பெயரிலே செயல்பட முடியும்.       


மூன்றாவதாக, வேந்தர் என்ற அதாகாரமானது மாநில அரசு கீழ் உள்ள பல்கலைக்கழக சட்டவிதிகளின் படி வழங்கப்பட்டதாகும். எனவே, வேந்தர் அதிகாரத்தை ஆளுநர் தம் உளத்தேர்வின்படி செயல்படுத்த முடியாது.          


மாநில அரசின் கீழ் பல்கலைக்கழகங்களை கொண்டு வருவது சரியாகுமா?    


பல்கலைக்கழக விவகாரங்களில் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மறுவரையறை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மகராஷ்டிரா அரசு சமீபத்தில் பொதுப்பல்கலைக்கழகங்கள் சட்ட திருத்த மசோதா மூலம், ஆளுநர் தனது விருப்பத்திற்கு ஏற்ப துணை வேந்தரை நியமிக்க முடியாது சூழல் உருவாகியுள்ளது. அதே போன்று, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் முதல்வருக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் போக்கு அதகரித்து வருகிறது. 


அதேநேரத்தில், பல்கலைக்கழகங்களில் முடிந்த வரையில் அரசின் பலமான தலையீடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இந்தியாவில் தற்போது உயர்க்கல்வி நிறுவனங்கள் காவிமயமாகி வருவதாக சமூக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.



தமிழ்நாடு ஆளுநர் 


 


அதே போன்று, ஆளுநர் பதவியும் அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல என்ற புரிதலும் இங்கு முக்கியமாகிறது. ஆளுநர், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். எனவே, ஆளுநர் இயல்பாகவே பிரதிநிதித்துவ நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை. இரண்டாவதாக, ஆளுநர்,  குடியரசுத் தலைவர் விரும்பும்வரைதான் பதவியில் இருப்பார் (Pleasure of the President). அதாவது, எந்த காரணமும் அளிக்காமல் ஆளுநரை பதிவியில் இருந்து அகற்றும் உரிமை குடியரசுத் தலைவருக்கு உண்டு.  


ஜனநாயக நாட்டில் எந்தவொரு, அரசு நிறுவனங்களும் அரசியல் தலையீடு இல்லாமல் இயங்க முடியாது. எனவே, ஆளுநர் Vs முதல்வர் என்ற போட்டியில் எது குறைவான தீங்கை ஏற்படுத்தும் என்ற கேள்வியே இங்கு முக்கியம் பெறுகிறது. மாநில அரசின் சட்ட விதிகளின் படியே பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்படுகிறது. துணைவேந்தர், இணைவேந்தர், பதிவாளர், நூலகர் என அனைத்து பல்கலைக்கழகத்தின் அலுவலக பதவிகளும் சட்டத்தின் மூலம்  உருவாக்கப்படுகிறது.    


நாடாளுமன்ற ஜனநாயகத்தில், முதலமைச்சர்  தலைமையிலான அமைச்சரவை, சட்டமன்றப் பேரவைக்கு கூட்டுப் பொறுப்புடையதாக இருப்பதால் ஆளுநரை விட மாநில மாநில முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதே நல்லதாக பார்க்கப்படுகிறது. 


அடுத்தகட்ட விவாதம்: இந்தியாவில் உயர்க்கல்வியைப் பற்றிய விவாதங்கள் பெரும்பாலும்  QS போன்ற  உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதோடு நின்று விடுகிறது. மத்திய அரசின் 50% பட்ஜெட் நிதி ஒதுக்கீடு ஐஐடி, ஐஐஎம், என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களை சென்றடைகிறது. இதில், பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 3% மட்டுமே. ,மறுபுறம், நாட்டின் 95% மாணவர்கள் மாநில பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டம் பெறுகின்றனர். இவர்களின் கல்வித் தரங்களை உயர்த்தவோ, கவலை கொள்ளவோ, செயல் திட்டங்களை வகுக்கவோ யாரும் இல்லை. இன்று பெரும்பாலான பொறியியல் மற்றும் கலை கல்லூரிகள் நாட்டின் முன்னேற்றப் பாதையில் இருந்து ஒடுக்கப்பட்டு, ஒரங்கப்பட்டு விட்டன


மத்திய அரசிடம் ஐஐடி, எய்ம்ஸ் போன்ற கல்லூரிகளை கேட்டுப் பெறுவதை விட்டுவிட்டு, மாநில அரசுகள் உயர்க்கல்வியை சுயாதீனமாக   உள்வாங்கிக் கொள்ள வேண்டும். கல்விப் புரட்சிக்கு முன்வர வேண்டும்.  ஒவ்வொரு கல்லூரிகளின்  செயல்பாடுகளையும் உள்ளூர்மயமாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுடன் இணைக்க வேண்டும். கிராமப்புறங்களில்  தொழில் முனைவு திறன்களுடன் இணைக்கக் கூடிய வகையில் கல்வி நிறுவனங்களை உருவாக்கிட வேண்டும். தேசிய வேளாண் அறிவியல் கழகம் (National Academy of Agricultural Sciences) என்பதிற்குப் பதிலாக தஞ்சை, இராமநாதபுரம் வேளாண் அறிவியல் கழகங்களின் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். 


மாநில அளவிலான பார்வையும், மாநில சுயாட்சியும் சமூக நீதி நிலைநாட்டும் என்பதே வரலாறு தரும் பாடம்.