கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் சமூகநீதி பயன்களை பெற தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சட்டத்தில் உரிய திருத்தம் செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

Continues below advertisement


சமூக நீதியில் அடுத்த சிக்ஸர்:


பட்டியலினத்தோருக்கான சட்ட பாதுகாப்பு, உரிமை, இடஒதுக்கீடு சலுகைகளை கிற்ஸ்துவராக மதம் மாறிய ஆதிதிராவிடர்களும்  பெற தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "கிறிஸ்தவராக மாறிய ஆதிதிராவிடர்களுக்கு சலுகை வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் கருணாநிதி.


மதம் மாறிய பிறகும் ஆதிதிராவிட மக்கள் தீண்டாமை உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு தவிர எஞ்சிய அனைத்து சலுகைகளும் கிறிஸ்தவராக மாறப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 


கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதே சரியான நிலைப்பாடு ஆகும். மதம் மாறியதால் உரிமையை வழங்க மறுப்பது சரியல்ல என்பதே எங்கள் நிலைப்பாடு" என்றார்.


மத்திய அரசு அமைத்த விசாரணை ஆணையம்:


சீக்கியம், பௌத்தம் தவிர கால போக்கில் வேறு மதங்களுக்கு மாறிய தலித்துகளை பட்டியலினத்தில் சேர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆராய இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு மூன்று பேர் கொண்ட விசாரணை ஆணையத்தை கடந்தாண்டு அமைத்தது.


3 பேர் கொண்ட ஆணையத்தில் பேராசிரியர் சுஷ்மா யாதவ், பல்கலைக்கழக மானிய குழு உறுப்பினரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலருமான ரவீந்தர்குமார் ஜெயின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.


நீதிபதி பாலகிருஷ்ணன் பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க இரண்டு ஆண்டு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


தலித் கிறிஸ்தவர்கள் மற்றும் தலித் இஸ்லாமியர்களை பட்டியலினத்தில் சேர்க்கவும் எஸ்.சி. பட்டியலில் சேர்ப்பதற்கு மத அளவுகோல்களை நீக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 


தற்போது, ​​அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட சாதிகள்) ஆணை, 1950 இந்து, சீக்கிய அல்லது பௌத்த சமூகங்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே பட்டியலினத்தவராக வகைப்படுத்துகிறது. இந்த ஆணை இயற்றப்பட்டபோது, ​​தீண்டாமை காரணமாக அவர்கள் எதிர்கொள்ளும் சமூக குறைபாடுகள் மற்றும் பாகுபாடுகளின் அடிப்படையில் இந்து சமூகங்களை பட்டியலினத்தவராக வகைப்படுத்த அனுமதித்தது. 1956ல் சீக்கிய சமூகங்களையும், 1990ல் பௌத்த சமூகங்களை பட்டியலினத்தவராக சேர்க்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டது.


பட்டியலினத்தவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவர்களை பட்டியலினத்தில் சேர்த்தால் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்தும் விசாரணை ஆணையம் ஆராயும் என மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அவர்களின் மரபுகள், பழக்கவழக்கங்கள், சமூக மற்றும் பிற பாகுபாடுகள், மத மாற்றத்தின் விளைவாக அவர்கள் எப்படி மாறியிருக்கிறார்கள் என்பதை ஆராய்வது இதில் அடங்கும்.