விழுப்புரம்: வானூரில் செம்மண் கடத்தலுக்கு உடந்தையாக பணியாற்றி வந்த வட்டாட்சியர் உட்பட 8 பேர் கூண்டோடு இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகில் உள்ள பட்டானூரில் இருந்து ஆரோவில்லுக்கு செம்மண் கடத்தி விற்பனை செய்யப்படுவதாகவும், அதற்கு வானூர் வட்டாட்சியர் உடந்தையாக இருப்பதாகவும் கிராம மக்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தனர்.


வானூரில் வட்டாட்சியர் உதவி உடன் சுரண்டப்படும் செம்மண் - முதல்வரின் தனிப்பிரிவுக்கு மக்கள் புகார் மனு



விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டத்திற்குட்பட்ட திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் உள்ளது பட்டானூர் வருவாய் கிராமம். மண்வளம் மிக்க இக்கிராமத்தின் அப்பன் சாவடி குட்டை, சமட்டியான் குளம், வசந்தபுரம் ஆகிய பகுதிகளில் ஓடை புறம்போக்கில், அரசின் எவ்வித அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் வெட்டி, செம்மண்ணை ஆரோவில் பகுதியில் கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். கடந்த 4 மாதங்களாக இது நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் உள்ள கவுன்சிலர் ஒருவரின் கணவருக்குச் சொந்தமான லாரியில், ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் நாளொன்றுக்கு 100 லோடு டிப்பர் லாரிகளில் கொண்டு செல்வதால் சாலைகள் மோசமடைந்து உள்ளது என அந்த மனுவில் கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.




மேலும், இது குறித்து வானூர் வட்டாட்சியர் உமாமகேஸ்வரனிடமோ, பட்டானூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசனுக்கோ புகார் தெரிவித்தால், புகார் தெரிவிக்கும் நபர்கள் குறித்து ஊராட்சித் தலைவருக்கு தகவல் தெரிவித்து அவர்கள் மூலம் மிரட்டப்படுகின்றனராம். இதனால் மக்கள் அவர்களை அணுக முடியவில்லை. மேலும் குட்டைப் புறம்போக்கு நிலங்களை சமன் செய்து, அவற்றை பட்டாவாக மாற்றித் தருகிறோம் எனக் கூறி பணம் பெறுவதாகவும் முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ள கிராம மக்கள், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.




இது தொடர்பாக வானூர் வட்டாட்சியர் உமா மகேஸ்வரனிடம் கேட்டபோது, வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டு கொண்டதன் பேரில் மண் அள்ள அனுமதி அளித்ததாகக் கூறினார். வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமனிடம் இதுபற்றி கேட்டபோது, அதுபோன்று யாருக்கும் நான் கடிதம் கொடுக்கவில்லை. அங்கு செம்மண் குவாரி இயங்குவதும் தனக்கு தெரியாது என்றார். இந்த நிலையில்  ABP நாடு செய்தி வெளியான பின்பு மாவட்ட ஆட்சியர் இது குறித்த விசாரணை நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார், இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் செம்மண் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த வட்டாட்சியர் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட 8 பேரை பணியிடை மற்றம் செய்து உத்தரவிட்டார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர