ரேஷன் கார்டு நகல் பெற விண்ணப்பிக்கலாம்
ரேஷன் கார்டில் திருத்தம் செய்தவர்களுக்கு நகல் கார்டு வழங்கும் திட்டம் துவக்கப்பட்ட, கடந்த இரு ஆண்டுகளில், 10 லட்சம் நகல் ரேஷன் கார்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. நகல் கார்டு பெற விரும்புவோர், www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கார்டு மற்றும் அஞ்சல் சேவைக்கு சேர்த்து பணம் செலுத்தினால், தபாலில் வீட்டுக்கு கார்டு அனுப்பப்படும்.
வீடு தேடி வரும் ரேஷன் அட்டை
தமிழகத்தில் சுமார் 2.2 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன, தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல்வேறு பயன்களை வழங்கி வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டுகளை பெற நாள் தோறும் அரசு அலுவலகங்களுக்கு அழைந்து வரும் நிலையில், அரசு அலுவலகங்களுக்கு நேரில் வந்து நகல் மின்னணு குடும்ப அட்டைகள் பெறும் முறையை மாற்றி அஞ்சல் வழியாக அவர்களின் இருப்பிடத்திற்கே அனுப்பும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கடந்த மே 2025 வரை 10 லட்சத்து 03,887 நகல் மின்னணு குடும்ப அட்டைகள் அஞ்சல் வழியாக பயனாளிகளின் இருப்பிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டில் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு திட்டம், புதிய ரேஷன் கார்டுகளை பயனாளிகளின் வீடுகளுக்கு அஞ்சல் மூலம் அனுப்புவதற்காக அரசு செயல்படுத்தும் முயற்சியாகும். இதற்கு www.tnpds.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, ஒப்புதல் பெற்றவுடன் ரேஷன் கார்டு அச்சிடப்பட்டு, அஞ்சல் கட்டணமாக 25 ரூபாய் செலுத்தி வீட்டுக்கு அனுப்பப்படும்.
தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள "வீடு தேடி வரும் ரேஷன் கார்டு" (Doorstep Ration Card Delivery) திட்டம், பொதுமக்கள் நேரில் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியத்தை குறைக்கும் வகையில் பயனுள்ளதாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், புதிய ரேஷன் கார்டு பெறுவதோடு, மாற்றம், திருத்தம், புது உறுப்பினர் சேர்க்கை போன்ற சேவைகளும் வீட்டிலேயே பெற முடிகிறது.
புதிய ரேஷன் கார்டு யார் விண்ணப்பிக்கலாம்?
புதிய ரேஷன் கார்டு பெற விரும்பும் குடும்பங்கள், ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்ய விரும்புபவர்கள், ரேஷன் கார்டு இழந்தவர்கள் அல்லது பழைய கார்டை புதுப்பிக்க விரும்புவோர்
விண்ணப்பிக்கும் முறை:
ரேஷன் கார்டை விண்ணப்பிக்க அரசு தளத்தின் மூலம்: https://tnpds.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
மொபைல் ஆப்: “TNeGA” அல்லது “TNPDS” என்ற அதிகாரப்பூர்வ செயலியை பதிவிறக்கம் செய்து அதில் விண்ணப்பிக்கலாம்.
புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முகப்புப் பக்கத்தில் “Smart Card Application” என்பதை தேர்வுசெய்ய வேண்டும். தங்களுக்கு எந்த மொழி வசதியாக உள்ளதோ அதற்கு ஏற்ப மொழியை (தமிழ் அல்லது English) தேர்வுசெய்யலாம்.
இதன் தொடர்ந்து “Apply for New Smart Card” என்பதை கிளிக் செய்யவும்.
விண்ணப்பப் படிவத்தை கேட்கப்பட்டுள்ள தகவல்களான குடும்பத் தலைவர் பெயர், முகவரி (வீட்டு எண், தெரு, மாவட்டம், பின் குறியீடு), குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொடர்பு, ஆதார் எண் (தலைவரும் மற்றும் உறுப்பினர்களின்), மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண், புகைப்படம் மற்றும் ஆதார் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
ரேஷன் கார்டு பெற இணைக்க வேண்டிய ஆவணங்கள்
ஆதார் கார்டு
முகவரி சான்று (மின் கட்டணம், வாடகை ஒப்பந்தம், வாக்காளர் அடையாள அட்டை)
குடும்ப தலைவரின் புகைப்படம், பழைய ரேஷன் கார்டு நகல் - இதனை தொடர்ந்து தகவல்கள் அனைத்தும் சரிபார்த்து, "Submit" செய்ய வேண்டும்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டதும், ஒரு எண் கிடைக்கும். இதை பதிவு செய்து வைக்கவும். இதனை தொடர்ந்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது. பதிவேற்றம் செய்யப்பட்ட தகவல்களுக்கு ஒப்புதல் கிடைத்ததா.? என்பதையும் சரி பார்த்துக்கொள்ளலாம். அந்த வகையில் விண்ணப்ப நிலையை பார்க்க முகப்புப் பக்கத்தில் உள்ள “Application Status” பகுதியை சென்று, உங்கள் பதிவு எண்னை உள்ளீடு செய்து நிலையை பார்க்கலாம்.