Ramdas Athawale: லிஸ்ட்டிலே இல்லாத அத்வாலே.. தமிழக தேர்தலில் போட்டி! இவ்ளோ காரணம் இருக்கா?
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே-வின் இந்திய குடியரசு கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறியிருப்பதன் பின்னணி காரணம் என்ன? என்பதை கீழே காணலாம்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியினரும் தொகுதிப் பங்கீடு, கூட்டணிப் பேச்சுவார்த்தை, பரப்புரை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் களமிறங்கும் அத்வாலே:
இந்த நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலில் பட்டியலிலே இல்லாத மகாராஷ்ட்ரா கட்சியான இந்திய குடியரசு கட்சி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் கட்சியே இந்த கட்சி ஆகும். மத்தியில் பாஜக கூட்டணியில் உள்ள இவரது கட்சி மகாராஷ்ட்ரா அரசியலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாகவே, இவருக்கு மத்தியில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு சென்னை வந்த ராம்தாஸ் அத்வாலே, அதிமுக- பாஜக கூட்டணியில் 10 தொகுதிகள் கேட்போம் என்றும், இல்லாவிட்டால் 51 தொகுதிகளில் தங்களது கரும்பு விவசாயி சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார்.
காரணம் என்ன?
தமிழ்நாட்டில் அறிமுகமே இல்லாத இவரது கட்சிக்கு அதிமுக - பாஜக கூட்டணியில் ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படாது என்பதே கள யதார்த்தம். ஆனால், அவர் இவ்வாறு கூறியிருப்பதன் பின்னணியில் ஒரு அரசியல் காய் நகர்வு இருப்பதாக கருதப்படுகிறது.
அதாவது, இந்த முறை அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் சிறுபான்மையினர், பட்டியலினத்தவர்கள் வாக்குகள் பெரும்பாலும் திமுக - தவெக கூட்டணிக்கே செல்லும் என்று கருதப்படுகிறது. மகாராஷ்ட்ராவில் பட்டியலினத்தவர்களின் வாக்குகளை அதிகளவில் தன் பக்கம் வைத்திருப்பவர் ராம்தாஸ் அத்வாலே.
பட்டியலின சமுதாய வாக்குகள்:
தமிழ்நாட்டில் அவர் அறிமுகம் இல்லாதவர் என்றாலும் அவர் பட்டியலின சமுதாய வாக்குகள் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் களமிறங்கினால், தொகுதிக்கு சுமார் 300 முதல் 500 வாக்குகள் வரை பட்டியலின வாக்குகளை பிரிப்பார் என்று கருதப்படுகிறது. அவ்வாறு அவர் வாக்குகளை பிரித்தால் அது திமுக, தவெக-விற்கு பின்னடைவாக அமையும் என்றும் கருதப்படுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் கரும்பு விவசாயி சின்னம் என்றாலே சீமான் சின்னமே அனைவரது நினைவுக்கும் வரும். கடந்த தேர்தலில் அவர்கள் மைக் சின்னத்தில் போட்டியிட்டு தங்களது வாக்கு வங்கி பலத்தை நிரூபித்தனர். இந்த தேர்தலில் அத்வாலே கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டால் அது சீமானுக்கும் பின்னடைவாக அமையும் என்று கருதப்படுகிறது.
இந்த அரசியல் காய் நகர்வின் பின்னணியில் பாஜக இருப்பதாக கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் அரசியல் சதுரங்கங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கும் என்றே கூறலாம்.























