கட்டிட கான்ட்ராக்டர் மர்ம மரணம்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள நரிப்பையூர் வெள்ளப்பட்டி கடற்கரை பகுதியில் கடந்த 16 - ம் தேதி ஆண் ஒருவர் விழுந்து கிடந்தார் அங்கிருந்தவர்கள் அருகில் சென்று பார்த்த போது அந்த நபர் இறந்து சடலமாக கிடப்பது அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக வாலிநோக்கம் மரைன் போலீசாருக்கு தகவல் அளிக்கவும் அவர்கள் விரைந்து சென்று தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது தான் உயிரிழந்தவர் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் மீனவருமான 35 வயதான சிலம்பரசன் என்பது உறுதியானது.
பெண்ணுடன் முறையற்ற உறவு
உடனடியாக சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் இருந்த காயங்கள் , இது ஒரு திட்டமிட்ட கொலை என்பதை பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியது. பிறகு போலீசார் இது குறித்த விசாரணையை துரிதப்படுத்தினார்கள். அப்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் போலீசாரின் விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்தன.
அதாவது கன்னிராஜபுரம் பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணின் சகோதரர் செல்வலிங்கம் என்பவருக்கும், சிலம்பரசனுக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல் இருந்து வந்துள்ளது. அந்தப் பெண் கணவரை இழந்த நிலையில், சிலம்பரசனுக்கும் அவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்துள்ளது.
இது குறித்த தகவல் தெரிந்த செல்வலிங்கம், தன் தங்கையுடனான இந்தத் தொடர்பை உடனடியாக கைவிடுமாறு சிலம்பரசனை பலமுறை கடுமையாக எச்சரித்துள்ளார். ஆனால், சிலம்பரசன் அந்த உறவை முறித்துக்கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அந்தப் பெண்ணையே தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு செல்வலிங்கத்திடம் வற்புறுத்தியுள்ளார்.
தீர்த்து கட்ட முடிவு
இது செல்வலிங்கத்துக்கு மேலும் கொதிப்பை தந்துள்ளது. தன் குடும்ப கௌரவத்திற்கு இழுக்கு நேரிடுவதையும், தங்கை மீதான ஈர்ப்பு குறையாமல் சிலம்பரசன் செயல்படுவதையும் கண்டு ஆத்திரமடைந்த செல்வலிங்கம், அவரை ஒரேடியாக தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
இந்த கொடூர செயலை நிறைவேற்ற சிலம்பரசனுக்கே நெருங்கிய நண்பர்களான மாரிமுத்து மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய 2 பேரின் உதவியை செல்வலிங்கம் நாடியுள்ளார். திட்டமிட்டபடி கடந்த 15 - ம் தேதி இரவு வெள்ளப்பட்டி கடற்கரைக்கு சிலம்பரசனை மது அருந்த அழைத்தனர். நண்பர்கள் என்பதால் எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் சிலம்பரசன் பீச்சுக்கு சென்றுள்ளார்
அங்கு காத்திருந்த மாரிமுத்து, ரமேஷ் கண்ணன் இருவரும் திட்டமிட்டு அளவுக்கு அதிகமாக மது ஊற்றி தந்து குடிக்க செய்துள்ளனர். போதையின் உச்சத்தில் இருந்த சிலம்பரசனைத் தாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்ட செல்வலிங்கம் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து, படகு துடுப்பால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
கடற்கரையில் ஒதுங்கிய உடல்
இதில் ரத்தம் சொட்ட சொட்ட சம்பவ இடத்திலேயே விழுந்துள்ளார் சிலம்பரசன். எனினும், ஆதாரங்களை மறைக்க வேண்டும் என்பதற்காக சிலம்பரசனை 3 பேரும் சேர்ந்து தூக்கிக் கடலில் வீசினர்.
இறுதியில், இந்த கொலைக்கு உதவிய மாரிமுத்து மற்றும் ரமேஷ் கண்ணன் ஆகிய இருவருக்கும் பணத்தை அள்ளித் தெளித்த செல்வலிங்கம், அவர்களைத் தலை மறைவாக இருக்க குற்றாலம் அனுப்பி வைத்தாராம். இதற்கு பிறகு தான் கடற்கரையில் சடலம் கரை ஒதுங்கியிருக்கிறது. இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, செல்போன் சிக்னல்கள் மூலம் சம்பந்தப்பட்டவர்களை கையும் களவுமாக போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.
அப்போது தான் விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டனர். தங்கையுடனான முறையற்ற உறவைத் தடுக்க அண்ணன் செல்வேந்தரன் தங்களிடம் உதவி கேட்டதால் , இவ்வாறு கொலை செய்தததாக வாக்குமூலம் தந்தனர். இப்போது செல்வலிங்கம், மாரிமுத்து, ரமேஷ்கண்ணன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
