சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டாவது தந்தை

சென்னை புழல் பகுதியில் வசித்து வரும் 35 வயதுடைய பெண்ணுக்கு , 15 வயதில் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினைகளால் முதல் கணவரை விவாகரத்து செய்த அவர் , கடந்த 2018-ஆம் ஆண்டு பார்ஹத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு தனது குழந்தைகளுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இந்த நிலையில், அண்மையில் தனது 15 வயது மகளிடம் இரண்டாவது கணவர் பார்ஹத் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சிப்பதை அந்த பெண் நேரில் பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவரிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது குடும்பத்தில் கடும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், சிறுமிக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளியே தெரிவித்தால் கடத்திச் சென்று கொன்று விடுவேன் என்று பார்ஹத்தின் நண்பர்கள் சிலர் மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த சிறுமியின் தாய், புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Continues below advertisement

கைது இல்லை - விஷம் அருந்து தற்கொலைக்கு முயற்சி

புகாரின் அடிப்படையில், கடந்த 4 - ம் தேதி போக்சோ சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பார்ஹத், பிரியா, ஷாம்லி மற்றும் ஜோசப் ஆகிய நால்வர் மீது குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு இரண்டு நாட்கள் கடந்தும் குற்றம் சாட்டப்பட்ட யாரும் கைது செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கடும் மனவேதனை மற்றும் விரக்திக்கு ஆளான சிறுமியின் தாய் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள், சென்னை கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நால்வரையும் உடனடியாக கைது செய்து சிறுமிக்கு நீதி வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

15 வயது சிறுமியிடம் தாயின் இரண்டாவது கணவரே பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.