புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் புழல் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். 


புழல் ஏரி கரை உடையும் அபாயத்தில் உள்ளதாக இன்று ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த செய்தி குறித்து, திருவள்ளூர்,கொசஸ்தலையாறு வடிநில கோட்ட நீர்வளத் துறை செயற்பொறியாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் புழல் ஏரி பாதுகாப்பாக உள்ளதாகவும் மக்கள் எந்த விதத்திலும் பதற்றம் அடையத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுகுறித்து நீர்வளத் துறை செயற்பொறியாளர் கூறி உள்ளதாவது:


’’புழல்‌ ஏரியானது சென்னை மாநகர குடிநீர்‌ தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும்‌ மிக முக்கியமான ஏரியாகும்‌. இந்த ஏரியானது திருவள்ளூர்‌ மாவட்டம்‌, மாதவரம்‌ ஒன்றியத்தில்‌ அமைந்துள்ளது. இந்த ஏரியின்‌ நீர்‌பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர்‌ ஆகும்‌. இந்த ஏரியின்‌ முழ உயரம்‌ 2120 அடியாகும்‌. இந்த ஏரியின்‌ முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும்‌. ஏரியின்‌ கரையின்‌ நீளம்‌ 7090 மீட்டர்‌ ஆகும்‌.


இன்றைய (07.12.2023) காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர்‌ இருப்பு உள்ளது. ஏரியின்‌ கொள்ளளவு 3002 மி.க. அடியாக உள்ளது. மேலும்‌இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல்‌ ஏரியின்‌ நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கன அடி விதம்‌ உபரி நீர்‌ வெளியேற்றப்பட்டு வருகிறது.


கன மழையால் கூடுதல் நீர் வரத்து


கடந்த சில நாட்களாக மிக்ஜாம்‌ புயலினால்‌ அதிக அளவு கன மழை பெய்ததினால்‌ ஏரிக்கு நீர்‌ வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால்‌ ஏரியின்‌ நீர்‌ மட்டம்‌ வேகமாக உயர்ந்து வந்த நிலையில்‌ ஏரியில்‌ இருந்து ரெகுலேட்டர்‌ வழியாக உபரி நீர்‌ வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.


அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால்‌ ஏரியில்‌ மிக கடுமையான அளவில்‌ அலைகள்‌ ஏற்பட்டு கலங்களின்‌ மேல்‌ தண்ணீர்‌ வெளியேறியது, இதனால்‌ காவல்‌ துறை பாதுகாப்பு அறை பின்‌ பகுதியில்‌ கரையில்‌ உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர்‌‌ பக்கத்தில்‌ அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால்‌ ஆன Apron சரிந்து மண்‌ அரிப்பு ஏற்பட்டது.


மண்‌ அரிப்பு ஏற்பட்டது எப்படி?


இது ஏரியின்‌ FTL-ஐ விட 2 மீட்டர்‌ உயரத்தில்‌ அமைந்துள்ளது, இதன்‌ வழியாக தண்ணீர்‌ வெளியேறவில்லை, மேலும்‌ கலங்கல்‌ வழியாக அலைகளால்‌ தண்ணீர்‌ வெளியேறியதால்‌ சாலையில்‌ அரிப்பு ஏற்பட்டது.


தற்போது மண்‌ அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில்‌ கிராவல்‌ மண்‌ கொட்டி மட்டப்படுத்தப்படும்‌ பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறது''.


இவ்வாறு திருவள்ளூர்‌ நீர்வளத் துறை செயற்பொறியாளர்‌ விளக்கம் அளித்துள்ளார்.


இந்நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் புழல் ஏரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஏரியின் நிலை, நீர் இருப்பு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.