புதுச்சேரி: வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூபாய் 200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூபாய் 400 என கட்டணத்தை குறைத்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது. இந்த கட்டண சலுகை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.


அதைப்போல, மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மத்திய அரசின் 200 ரூபாய் மானியத்தை சேர்த்து, புதுச்சேரி அரசு கூடுதலாக 150 ரூபாய் மானியம் வழங்குகிறது. இதனால் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு மொத்தமாக சிலிண்டருக்கு ரூ.350 குறைக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


மத்திய அரசு ரூ.200 மானியம் அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. மத்திய அரசின் இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன். புதுச்சேரி யூனியன் பிரதேச குடிமக்கள் சார்பாக பிரதமர் அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


முதல்வர் ரங்கசாமி அறிக்கையில் கூறியதாவது :


சமையல்‌ எரிவாயுவின்‌ விலை ரூ.200- குறைக்கப்படும்‌ என்கிற மத்திய அரசின்‌ அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. மாண்புமிகு பிரதமர்‌ திரு.நரேந்திர மோடி அவர்கள்‌ தலைமையிலான அரசு, மக்களின்‌ வாழ்க்கை வசதிகளை மேம்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏழைக்‌ குடும்பங்களுக்கு சமையல்‌ எரிவாயு இணைப்பு வழங்கும்‌ பிரதம மந்திரி உஜ்வாலா திட்டம்‌ அதற்கு ஒரு உதாரணம்‌ ஆகும்‌. உஜ்வாலா திட்டத்தின்‌ கீழ்‌ ஏற்கனவே 9.1 கோடி சமையல்‌ எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. ஏழைப்‌ பெண்களுக்கு கூடுதலாக 75 லட்சம்‌ சமையல்‌ எரிவாயு இணைப்புகளுக்கு மத்திய அமைச்சரவை இப்போது ஒப்புதல்‌ அளித்துள்ளது. ஏற்கனவே உஜ்வாலா திட்டத்தின்‌ கீழ்‌ பயனாளிகள்‌ சிலிண்டருக்கு 200 ரூபாய்‌ மானியம்‌ கொடுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இன்று முதல்‌ மேலும்‌ 200 ரூபாய்‌ மானியம்‌ வழங்கப்படும்‌.


ஓணம்‌ மற்றும்‌ ரக்ஷா பந்தன்‌ தினத்தில்‌ மகளிருக்கு பிரதமர்‌ திரு.நரேந்திர மோடியின்‌ பரிசாக இந்த விலைக்‌ குறைப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில்‌ மாநில அரசின்‌ சார்பில்‌ ஏற்கனவே சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.300-ம்‌. மஞ்சள்‌ நிற அட்டைதாரர்களுக்கு ரூ.150-ம்‌ சமையல்‌ எரிவாயு மானியம்‌ வழங்கும்‌ திட்டம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்‌, மத்திய அரசு ரூ.200- மானியம்‌ அளித்திருப்பது, புதுச்சேரி மக்களிடையே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுத்துவாக உள்ளது. மத்திய அரசின்‌ இந்த விலை குறைப்பை உளமார வரவேற்கிறேன்‌. புதுச்சேரி யூனியன்‌ பிரதேச குடிமக்கள்‌ சார்பாக மாண்புமிகு பிரதமர்‌ அவர்களுக்கு எனது நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.