புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் பழமையான வாயில் கட்டடம் இடிக்கப்பட உள்ளதையொட்டி, புதிய டிக்கெட் கவுண்டர் மற்றும் தற்காலிக வழி ஆகியவை இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

Continues below advertisement

புதிய டிக்கெட் கவுண்டர் திறப்பு 

புதுச்சேரி ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, பழமையான முகப்பு கட்டடம் இடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, பயணிகளின் வசதிக்காகப் புதிய டிக்கெட் கவுண்டர் மற்றும் தற்காலிக வழி ஆகியவை இன்று முதல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

ரூ. 93 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்

புதுச்சேரி ரயில் நிலையத்தை உலகத் தரத்திற்கு இணையாக மாற்றும் வகையில், சுமார் ரூ. 93 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் கடந்த 2023-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. இந்தத் திட்டத்தின் கீழ், பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டுமானங்கள் அமைக்கப்பட உள்ளன.

Continues below advertisement

குறிப்பாக, புதிய பார்சல் அலுவலகம், டிக்கெட் பரிசோதகர்கள் அலுவலகம், பைலட் ஓய்வறைகள், பயணிகள் காத்திருப்பு கூடம், நடை மேம்பாலம், லிப்ட், எஸ்கலேட்டர், உணவகம், வணிக வளாகம் மற்றும் மல்டி லெவல் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பழைய கட்டடம் இடிப்பு மற்றும் இடமாற்றம்

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மேம்பாட்டுப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணிகள் வேகம் எடுத்துள்ளன. ரயில் நிலையத்தின் முகப்புப் பகுதியாக விளங்கி வரும் பழமையான கட்டடத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதற்காக, அந்தப் பழைய கட்டடத்தில் இயங்கி வந்த அனைத்துப் பிரிவுகளும் சுப்பையா சாலை, முருகர் கோவில் எதிரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

புதிய கவுண்டர்கள் மற்றும் தற்காலிக வழி

பழைய கட்டடம் இடிக்கப்படுவதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க பின்வரும் தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:

முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர்: பழைய கட்டடத்தின் மேம்பாலம் அருகே ரயில் நிலையத்திற்கு உள்ளே செல்லும் தற்காலிக வழி, கழிப்பிடம் மற்றும் தட்கால் உள்ளிட்ட முன்பதிவு இல்லாத டிக்கெட் கவுண்டர்கள் (Unreserved Counters) அமைக்கப்பட்டுள்ளன.

முன்பதிவு டிக்கெட் கவுண்டர்: முருகர் கோவில் எதிரே அமைந்துள்ள புதிய கட்டடத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர்கள் (Reserved Counters) அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய டிக்கெட் கவுண்டர்களும் நேற்று முறையாகத் திறக்கப்பட்டு, இன்று முதல் முழுமையாகப் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பயணிகளின் வசதிக்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.