புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு இன்று (மார்ச் 8 வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது.


சிறுமி கொலை - நீதி கேட்டு புதுச்சேரியில் பந்த் போராட்டம்


புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று வரை ஒரு முதியவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வந்த நிலையில், தற்போது சிறுமியை கொலை செய்தது கருணாஸ் (19) என்கிற வாலிபர் மற்றும் விவேகானந்தன் (57) என்கிற முதியோர் என இருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகளை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்ட பின்னரே அவர் எப்படி கொலை செய்யப்பட்டுள்ளார் என தெரியவரும். முதற்கட்ட விசாரணையில், முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமையை செய்ய முயற்சித்ததில் அதிர்ச்சியில் சிறுமி உயிரிழந்தது என கூறப்படுகின்றது. பின்னர், அவர் கை மற்றும் கால்களை கட்டி முதியவரின் வேஷ்டியில் வைத்து வாய்காலுக்குள் சிறுமியின் உடலை போட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர்.




சிறுமி காணாமல் போன வழக்கு கொலை வழக்காக மாற்றம்


சிறுமி கடந்த சனிக்கிழமை அன்று மதியம் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமி மாயம், கடத்தப்பட்டிருக்கலாம் என்கிற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், சிறுமி நேற்றைய தினம் கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து தற்போது அவ்வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்துள்ளனர். மேலும் சிறுமியை கொலை செய்த இருவர் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும், பிரேத மருத்துவ அறிக்கை வந்த பிறகே போக்சோவில் எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்படும் என்பது தெரியவரும் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


சமூக ஆர்வலர்கள் போராட்டம் 


புதுச்சேரி சிறுமி கொலை விவகாரத்தில் நீதி வழங்க கோரி  இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் கடற்கரை காந்தி சிலை முன்பு போராட்டம் செய்தனர். சிறுமியை கொலை செய்தவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விசாரணையை தொடங்கிய சிறப்பு குழு 


இந்த சம்பவத்தில் போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில் சோலைநகர் பகுதியை சேர்ந்த கருணாஸ் (வயது 19), விவேகானந்தன் (57) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். இதில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு கொடூரமாக கொன்று சாக்கடை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது.


இதையடுத்து, சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் தடய அறிவியல் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.




நீதி கேட்டு அரசியல் கட்சிகள் முழு அடைப்பு போராட்டம்


இந்த நிலையில் கொடூர கொலை செய்யப்பட்ட சிறுமியின் கொலைக்கு நீதி கேட்டு புதுச்சேரியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உயிரிழப்பால் அங்குள்ள மக்களிடையே கடும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முழு அடைப்புக்கு பெரும் ஆதரவு குவிந்து வருகிறது. மாணவர்கள் பொதுத்தேர்வினை எழுதி வரும் சூழ்நிலையில் பந்த் தேவையற்றது என்று என்.ஆர். காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பெரும்பாலான தனியார் பள்ளிகள் நாளை விடுமுறை என அறிவித்துள்ளன. பள்ளி நிர்வாகங்கள் சார்பில் பெற்றோரை தொடர்பு கொண்டு பந்த் காரணமாக நாளை விடுமுறை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.


 நாளை காலை மற்றும் மதிய திரையரங்கு காட்சிகள் ரத்து


புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சார்ந்த 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீதி கேட்டும் அதிமுக, இண்டியா கூட்டணி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும்  இன்று காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.




முழு அடைப்பு போராட்டம்


புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன. சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முழு அடைப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்த மக்கள், தாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

 

தமிழக எல்லையில் நிறுத்தப்படும் பேருந்துகள் 

 

முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறுத்தி  வைக்கப்பட்டுள்ளது, சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்குவரும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழக எல்லை பகுதியான பட்டானூர் எல்லையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அதேபோல ஈசிஆர் சாலையில் இருந்து வரும் பேருந்துகளும் கீழ் புத்துப்பட்டு அருகே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்து பயணிகள் தமிழக எல்லைப் பகுதியில் இறக்கி விடப்படுகின்றன. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் சிரமத்தை பொறுப்பெடுத்தாமல் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செய்திகுறிப்பு 


புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் / அமைப்புகள் (08.03.2024)- ம் தேதி பந்த் / கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. இது தொடர்பாக இன்று காவல்துறை அதிகாரிகள் மற்றும் துணை மாவட்ட ஆட்சியர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் பொது தேர்வு நடைபெற இருப்பதால் பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு எந்தவித இடையுறும் ஏற்படாதவாறு போதிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, ஆகவே மாணவர்கள் அச்சம் கொள்ளாமல் தேர்வில் கலந்து கொள்ளலாம். மேலும் அனைத்து அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கபடுகிறது