புதுச்சேரி: புதுச்சேரியில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தலை முடியை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


வயிற்றில் இருந்த 1.5 கிலோகிராம் தலை முடி


இரைப்பை குடல் அறுவை சிகிச்சை துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைக் குறிக்கும் வகையில், புதுச்சேரி ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழு. 17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து 1.5 கிலோகிராம் தலை முடியை வெற்றிகரமாக அகற்றியுள்ளது. இந்த அறுவை சிகிச்சையானது இத்துறை சார்ந்த குழுவின் குறிப்பிடத்தக்க திறனையும் துல்லியத்தையும் எடுத்துக்காட்டுகிறது மற்றும் அசாதாரண மருத்துவ நிகழ்வுகளில் சரியான நேரத்தில் தலையீடு செய்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


தனிநபர்கள் தங்கள் தலைமுடியை வெளியே இழுத்து விழுங்கும் மனப்பாங்கு


நோயாளி கடந்த இரண்டு மாதங்களாக கடுமையான வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தியை அனுபவித்து வந்தார். ஆரம்ப நோயறிதல் சோதனைகள் வயிற்றுக்குள் ஒரு பெரிய பொருள் இருப்பதை வெளிப்படுத்தின. இது பின்னர் ஒரு விரிவான முடிபந்து அல்லது ட்ரைக்கோபெஸோர் (Trichobezoar) என்று அடையாளம் காணப்பட்டது. ட்ரைக்கோபெஸார் என்பது முடி உட்கொள்வதால் ஏற்படும் தீவிரமான இரைப்பை குடல் அடைப்புகளாகும். தனிநபர்கள் தங்கள் தலைமுடியை வெளியே இழுத்து விழுங்கும் மனப்பாங்கு கொண்ட இந்த நிலையானது பெரும்பாலும் ட்ரைகோட்டிலோமேனியா (Trichotillomania) எனப்படும் உளவியல் கோளாறுடன் தொடர்புடையது.


நிலைமையின் தீவிரத்தை விவரித்த மருத்துவமனையின் குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. சசிகுமார் கூறுகையில்..." வயிற்றில் இருந்த முடியின் அளவு நோயாளியின் செரிமான அமைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய முடிபந்தை வெற்றிகரமாக அகற்றியது எங்கள் குழுவின் நிபுணத்துவம் மற்றும் பயன்படுத்தப்படும் மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்களுக்கு சான்றாகும்", என்றார்.


வயிற்றில் இருந்த 1.5 கி.கிராம் தலை முடி அகற்றம்


அவர் மேலும் கூறுகையில், "90 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த இந்த அறுவை சிகிச்சை, சுற்றியுள்ள திசுக்களுக்கு சேதத்தை குறைக்கும் அதே வேளையில், முடி பந்தை பிரித்தெடுப்பதற்கான விரிவான மற்றும் எச்சரிக்கையான அணுகுமுறையை உள்ளடக்கியது. நோயாளி விரைவில் மீண்டு வரும் வகையிலும், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய அசௌகரியத்தைக் குறைக்கும் வகையிலும் மருத்துவர்கள் குழு இந்த அறுவைசிகிச்சையை தெளிவாக கையாண்டனர். முடியை முழுமையாக அகற்றுவதன் மூலமும், நோயாளியின் செரிமான செயல்பாட்டை மீட்டெடுப்பதன் மூலமும், கடுமையான அறிகுறிகளைக் குறைப்பதன் மூலமும் இந்த செயல்முறை முடிவடைந்தது", என்றார்.


அறுவை சிகிச்சைக்குப் பிறகு, நோயாளியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதையடுத்து, 3வது நாளிலிருந்து வழக்கமான உணவை உட்கொள்ளத் தொடங்கினார். மேலும், அவர் 3வது நாளிலேயே நிலையான நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.


ட்ரைகோடிலோமேனியாவினால் உருவாகும் சிக்கல்கள்


டாக்டர். சசிகுமார் மேலும் கூறுகையில், "இந்த நிலையில் உள்ள நோயாளி தங்கள் சொந்த தலைமுடியை வெளியே இழுத்து அதை உட்கொள்ள வேண்டும் என்ற உந்துதலை உணருவார். பொதுவாக பெண்கள் நீண்ட கூந்தலைக் கொண்டுள்ளதால் இந்த நிலை, ஆண்களை விட பெண்களில் பரவலாக உள்ளது. ட்ரைகோடிலோமேனியாவினால் உருவாகும் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வின் அவசியத்தையும், அசாதாரண அறிகுறிகள் எழும்போது மருத்துவ உதவியை நாடுவதன் முக்கியத்துவத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. உளவியல் கோளாறிலிருந்து படிப்படியாக விடுபட நோயாளி ஒரு மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதும் முக்கியம்", என்றார்.