சென்னை:  கடல் மாசுபாட்டைத் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினர் சென்னை கடற்கரையில் ஆழ்கடலில் சிறப்பான விழிப்புணர்வு நிகழ்வை நடத்தினர்.

Continues below advertisement

கடற்கரையில் ஆழ்கடலில் சிறப்பான விழிப்புணர்வு

கடல் மாசுபாட்டைத் தடுக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டால் இயற்கைக்கும் கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதுச்சேரியைச் சேர்ந்த ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் அரவிந்த் மற்றும் அவரது குழுவினர் சென்னை கடற்கரையில் அசத்தலான ஆழ்கடல் தூய்மைப் பணியை மேற்கொண்டுள்ளனர்.

60 அடி ஆழத்தில் தூய்மைப் பணி:

சென்னை கடற்கரைப் பகுதியில் சுமார் 18 மீட்டர் (60 அடி) ஆழத்தில் இறங்கிய ஆழ்கடல் நீச்சல் வீரர்கள், கடலுக்கு அடியில் தேங்கிக் கிடந்த சுமார் 7,000 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து வெற்றிகரமாக அப்புறப்படுத்தினர். கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Continues below advertisement

சாதனை பயிற்சியாளர் அரவிந்த்:

இந்த முயற்சியை முன்னெடுத்த புதுச்சேரியைச் சேர்ந்த அரவிந்த், ஒரு முன்னணி ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் ஆவார். இவர் ஏற்கனவே ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடுவது, தேசியக் கொடி ஏற்றுவது, சதுரங்கம் விளையாடுவது என பல்வேறு வினோதமான மற்றும் சாதனை முயற்சிகளை ஆழ்கடலில் நிகழ்த்தி தேசிய அளவில் கவனம் ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குவிந்து வரும் பாராட்டுகள்:

இந்த முறை, பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிராக தாரகை ஆராதனா குழுவினருடன் இணைந்து அரவிந்த் இந்தத் தூய்மைப் பணியை மேற்கொண்டார். ஆழ்கடலில் குப்பைகளை அகற்றும் இவர்களின் இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இயற்கையையும் கடல் வளத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கடமை என்பதை உணர்த்திய இந்த அர்ப்பணிப்பான முயற்சிக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன.