மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை புகழ்ந்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை பகிர்ந்துள்ளார். 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு தேசிய மற்றும் பல்வேறு மாநில அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனிடையே நேற்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். அப்போது மறைந்த விஜயகாந்தை பற்றி புகழ்ந்து பல கருத்துகளை தெரிவித்திருந்தார். இந்நிலையில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 


அதில், “சில நாட்களுக்கு முன்பு, நம்மால் பெரிதும் போற்றப்படும் மற்றும் மதிக்கப்படும் திரு விஜயகாந்த் அவர்கள் காலமானார். உண்மையிலேயே  அவர் அனைவருக்கும் ஒரு கேப்டனாக திகழ்ந்தார். ஒரு நல்ல தலைவர், தேவையுள்ள மக்களுக்கு மனமுவந்து உதவுபவர் மற்றும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர் விஜயகாந்த். தனிப்பட்ட முறையில், எனக்கு கேப்டன் மிகவும் அன்பான நண்பராக இருந்தார். நான் நெருக்கமாகப் பழகிய மற்றும் பல சந்தர்ப்பங்களில் பணிபுரிந்த நபர்களில் விஜயகாந்தும் ஒருவர்.


கேப்டன் பன்முக திறமை கொண்டவர். இந்திய சினிமா உலகில், விஜயகாந்தைப்போல் ஒரு சில நட்சத்திரங்கள் அழியா அடையாளத்தைப் பதித்துள்ளனர். அவரது ஆரம்ப காலங்களிலும் சரி,  சினிமாப் பணிகளிலும் சரி நமக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஏராளம் உள்ளது.  






தமிழ் சினிமாவின் தொடக்கத்திலிருந்து உச்சம் வரையிலான அவரது பயணம் வெறும் நட்சத்திரக் கதை மட்டுமல்லாமல், இடைவிடாத முயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்பின் ஒரு சரித்திரம் என்றே சொல்லலாம். அவர் புகழுக்காக சினிமா உலகில் நுழையவில்லை. அவரது பயணம் ஆர்வமும் விடாமுயற்சியும் கொண்டது. அவரது ஒவ்வொரு படமும் மகிழ்வித்தது மட்டுமல்லாமல், அந்த காலத்தின் சமூக நெறிமுறைகளை பரந்த அளவிலான பார்வையாளர்களுடன் ஆழமாக எதிரொலித்தது.


கேப்டனின் கதாபாத்திரங்களும் அவற்றை அவர் நடித்த விதமும் சாதாரண குடிமகனின் போராட்டங்கள் பற்றிய அவரது ஆழமான புரிதலை எடுத்துக்காட்டுகிறது. அநீதி, ஊழல், வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடும் பாத்திரங்களை அவர் அடிக்கடி பிரதிபலித்து இருந்தார். அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்தார். சமூகத்தின் நற்பண்புகள் மற்றும் தீமைகளை பிரதிபலிக்கும் கண்ணாடியாக அவரது படங்கள் இருந்தன என்று சொல்ல வேண்டும். இந்த தனித்துவமான பொழுதுபோக்கு மற்றும் சமூகத்துக்கான செய்தி விஜயகாந்தை தனித்து நிற்க வைத்தது.


இங்கு, கிராமப்புற வாழ்க்கை மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது அன்பை நான் சிறப்பாக எடுத்துரைக்க விரும்புகிறேன். மகத்தான புகழைப் பெற்ற பிறகும், உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகும், கிராம வாழ்க்கை மற்றும் பாரம்பரிய நெறிமுறைகள் மீதான விஜயகாந்தின் விருப்பம் நிலைத்திருந்தது. தன்னுடைய படங்கள் அவர் தனது கிராமத்து அனுபவத்தை நெருக்கமாகப் பின்பற்றியதாகத் தோன்றியது. கிராமப்புற சூழலைப் பற்றிய நகர்ப்புற மக்களின் புரிதலை மேம்படுத்த அவர் அடிக்கடி முன்மாதிரியான முயற்சிகளை மேற்கொண்டார்.


ஆனால் கேப்டனின் தாக்கம் வெள்ளித்திரையில் மட்டும் இல்லாமல் அரசியல் உலகில் நுழைந்த பின்பும் இருந்தது. அவர் சமூகத்திற்கு இன்னும் விரிவான முறையில் சேவை செய்ய விரும்பினார். அரசியல் உலகிற்கு அவர் பிரவேசித்தது அதிக தைரியம் மற்றும் தியாகம் என்றே சொல்லலாம். தமிழக அரசியலில் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி என இரு தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தியபோது அவர் அரசியல் களத்தில் இறங்கினார்.  2005 இல் விஜயகாந்த் நிறுவிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (DMDK) சித்தாந்தத்தில் தேசியவாதம் மற்றும் சமூக நீதி என்பது பிரதிபலித்தது. 


விஜயகாந்த் பேசும்போதெல்லாம், திரையில் அவர் செய்த ஆளுமைக்கு இணையாக இருந்தது. அது யாராலும் தவிர்க்க முடியாதபடி இருந்தது. தமிழ்நாட்டின் இருமுனை மற்றும் போட்டி நிறைந்த அரசியலில், 2011 இல் அவர் தனது கட்சி உருவாக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே பிரதான எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். நான் கேப்டனுடன் இணைந்து பணியாற்றிய 2014 மக்களவைத் தேர்தலில் எங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி 18.5% வாக்குகளைப் பெற்றது.   


1989 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு எந்த ஒரு முக்கிய அணியும் இல்லாத ஒரு தேசியக் கூட்டணியும் பெற்ற அதிகபட்ச வாக்கு அதுவாகும்.  சேலத்தில் எங்கள் கூட்டணி நடத்திய கூட்டத்தை நான் அன்புடன் நினைவுகூர்கிறேன்.  அங்கு அவரது அனல் பறக்கும் பேச்சாற்றலையும், மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் நான் கண்டேன். 2014-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தபோது, மகிழ்ச்சியான மக்களில் விஜயகாந்தும் ஒருவர். 2014 தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய ஜனநாயக தலைவர்கள் சந்தித்தபோது சென்ட்ரல் ஹாலில் அவர் அடைந்த மகிழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.


அவரது தொழில்முறை சாதனைகளுக்கு அப்பால், விஜயகாந்தின் வாழ்க்கை இளைஞர்களுக்கு மதிப்புமிகுந்த ஒரு பாடமாகும்.  குறிப்பாக விஜயகாந்தின் ஆற்றல், ஒருபோதும் மறையாத சேவை மனப்பான்மை மற்றும் முழுமையான அர்ப்பணிப்பு மூலம் எத்தனை சவால்களையும் சமாளிக்கும் திறமை ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சமாகும். தமிழ்நாடு மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவும் மருத்துவம் மற்றும் கல்வியில் முன்னணியில் இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் ஆர்வமாக இருந்தார்.


விஜயகாந்த் மறைவால், பலர் தங்கள் அன்புக்குரிய தலைவரை இழந்துள்ளனர். ஆனால் நான் ஒரு அன்பான நண்பரை இழந்துவிட்டேன். நிரப்ப முடியாத வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றிருக்கிறார். தைரியம், தாராள மனப்பான்மை, அறிவுமற்றும் வைராக்கியம் ஆகியவை ஒரு வெற்றிகரமான தலைவரின் நான்கு முக்கிய கூறுகள் என்பதை குறள் தெரிவிக்கிறது. கேப்டன் உண்மையிலேயே இந்த பண்புகளை கொண்டிருந்தார். அதனால்தான் விஜயகாந்த் அனைவராலும் மதிக்கப்பட்டார். 


விஜயகாந்த் இருந்த காலம் அவரது ரசிகர்களின் இதயங்களிலும், தமிழ் சினிமாவின் வரலாற்றிலும், பொது வாழ்க்கையிலும் தொடர்ந்து நிலைத்திருக்கும். மேலும், அனைவருக்கும் முன்னேற்றம் மற்றும் சமூக நீதியை தனது தொலைநோக்குப் பார்வையாக கொண்ட விஜயகாந்தின் எண்ணத்தை நனவாக்க தொடர்ந்து பணியாற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.