பொங்கல் பண்டிகைக்காக தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு தொடங்கியுள்ளது. 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இம்முறை ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால், வெளியூரில் இருக்கும் பெரும்பாலானோர் வியாழக்கிழமை (ஜனவரி 12) முதலே சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஜனவரி 17 ஆம் தேதி வரை விடுமுறை இருப்பதால் முன்கூட்டி  பயணம் செய்வதே சிறந்தது என முடிவெடுத்து அதற்கேற்றாற்போல் திட்டமிட்டுள்ளனர். 


வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், ரயில் பயணத்தை நம்பியிருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் சொந்த ஊருக்கு செல்ல வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அரசுப் பேருந்துகளை நாடியுள்ளனர். இதனால் தமிழக அரசின் போக்குவரத்துறை துறையால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளில் விறுவிறுப்பான முன்பதிவு நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில் தான் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று திரும்ப தமிழக அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. 


இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் 


 சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் ஜனவரி 12 ஆம் தேதி கூடுதலாக 2,751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3,955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4,043 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 6, 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


இதேபோல் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வர ஜனவரி 16 ஆம் தேதி 4,334 பேருந்துகளும், 17 ஆம் தேதி 4,961 பேருந்துகளும், 18 ஆம் தேதி 6300 பேருந்துகள் என மொத்தம் 15,595 இயக்கப்படுகிறது. இதனை செய்தியாளர்கள் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். 


பேருந்து பயணம் மேற்கொள்பவர்கள் கவனத்திற்கு 



  • கோயம்பேடு தவிர்த்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் , தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பைபாஸ் ஆகிய 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். 

  • அதேபோல் கோயம்பேட்டில் 10, தாம்பரம் சானடோரியம் மற்றும் பூந்தமல்லியில் தலா ஒன்று என மொத்தம் 12 இடங்களில் முன்பதிவு மையங்கள் செயல்படும்.

  • பேருந்துக்கான முன்பதிவுகளை நேரடியாகவோ அல்லது https://www.tnstc.in இணையதளம் வாயிலாகவோ செய்யலாம். அதேபோல் TNSTC Official App என்ற செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்யலாம். 


  • சென்னையில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர் செல்வதற்கும், பூந்தமல்லி பைபாஸில் இருந்து ஓசூர்,கிருஷ்ணகிரி, தர்மபுரி செல்வதற்கும், சேலத்தில் இருந்து பெங்களூர் செல்வதற்கும் கோயம்பேடு முன்பதிவு நிலையத்திலேயே முதல்முறையாக முன்பதிவு செய்து பயணிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. 



  • பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9445014450, 9445014436 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக 18004256151,044 24749002, 044 26280445, 044 26281611 ஆகிய எண்களில் புகாரளிக்கலாம். 

  • மேலும் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.