சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புபவர்களின் வசதிக்காக, நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

புறப்படும் விவரம்:

நாகர்கோவில் சந்திப்பிலிருந்து தாம்பரத்திற்கு ஒருவழி அதிவிரைவு சிறப்பு ரயில் (வண்டி எண்: 06160) இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலானது வரும் ஜனவரி 18-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 05.00 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் ஜனவரி 19-ஆம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 04.10 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலில் ஒரு ஏசி இரண்டாம் வகுப்பு பெட்டி, இரண்டு ஏசி மூன்றாம் வகுப்பு பெட்டிகள், ஒன்பது இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள், நான்கு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டு சிறப்பு பெட்டிகள் என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு எப்போது?

இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஜனவரி 17, சனிக்கிழமை) காலை 8.00 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பிவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் ரயில் தென் மாவட்ட பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. பயணிகள் ஐஆர்சிடிசி (IRCTC) இணையதளம் அல்லது ரயில் நிலைய முன்பதிவு மையங்கள் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.