TNPSC Group 2 Exam: வரலாற்றில் இதுவே முதல் முறை.. குரூப் 2 தேர்வு ஒத்திவைப்பு.. அரசியல் தலைவர்கள் கண்டனம்!
Group 2 Exam Postponed: குரூப் 2 போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என இபிஎஸ் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

தேர்வு மைய குளறுபடி காரணமாக தமிழ்நாட்டில் இன்று நடைபெறுவதாக இருந்த குரூப் 2 முதன்மை தேர்வுகள் கடைசி நிமிடத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தேர்வு மைய குளறுபடி
தமிழ்நாடு முழுவதும் 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் எழுதும் குரூப் 2 முதன்மை தேர்வுகள் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விண்ணப்பித்த தேர்வர்கள் காலையில் தேர்வு மையம் வந்தனர். அப்போது சென்னை டிஜி வைஷ்ணவா கல்லூரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டு அங்கு தேர்வு எழுத வந்தவர்கள் நந்தனம் அரசு கலைக்கல்லூரிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.
ஆனால் கடைசி நேரத்தில் மாற்றம் சொல்லப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த தேர்வர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேசமயம் 9 மணிக்கு பல மையங்களில் திட்டமிட்டபடி தேர்வு தொடங்கியது. இந்த நிலையில் தொடர் போராட்டத்தில் தேர்வர்கள் ஈடுபட்டதால் தமிழ்நாடு முழுவதும் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இதனால் இந்த தேர்வை எழுத வந்த பலரும் கடும் அவதியடைந்தனர்.
அரசியல் தலைவர்கள் கண்டனம்
இந்த நிலையில் குரூப் 2 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறவிருந்த குரூப் 2, 2A முதன்மைத் தேர்வானது, ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மைய குளறுபடிகளால் ஒத்திவைக்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்வு, தேர்வு நாளன்று ஒத்திவைக்கப்படுவது தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுவே முதல் முறை. அதுவும், பல இடங்களில் தேர்வர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதே தெரியாமல் தேர்வு எழுதியுள்ளனர். “Technical Fault” என ஒற்றை வரியில் தப்பிக்க முயலும் நிலையில் அதற்கு பின்னால் தேர்வெழுதிய இளைஞர்களின் பல ஆண்டுகால உழைப்பும் நம்பிக்கையும் சிதைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள கண்டன பதிவில்,”தமிழ்நாடு முழுவதும் இன்று காலையும், மாலையும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவிருந்த முதன்மைத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதற்கான டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தில் அலட்சிய செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை.மிகச்சாதாரணமான ஒரு போட்டித் தேர்வைக் கூட குளறுபடிகள் இல்லாமல் நடத்துவதற்கு முடியாத நிலையில் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது" என கூறியுள்ளார்.
9000 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களின் கனவு இங்கே நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. பல இடங்களில் சென்டர் ஒதுக்கப்படாமல் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் சில இடங்களில் தேர்வு எழுத ஆரம்பித்து விட்டார்கள். இந்த குளறுபடி இந்த ஆட்சியின் குழப்பத்தின் உச்சக்கட்டம். தேர்வு எழுதுவதே போராட்டமாக போராட்டமாக வெடித்திருப்பது வேதனையிலும் வேதனை அரசு உடனே இதற்கு நடவடிக்கை தேவை என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.























