தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளை தனது கூட்டணியில் இழுத்திருப்பதுடன் இடதுசாரிகளையும் தன்பக்கம் வசப்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

பாஜக கூட்டணியில் நீடிக்கும் பாமக:

அதிமுக கூட்டணி கவலைக்குரிய நிலையில் உள்ளது. ஆட்சியை அமைக்க தவெக தலைவர் விஜய் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை அணுகியபோதும், அதிமுக கூட்டணியில் 4 சட்டமன்ற உறுப்பினர்களுடன் இருந்த பாமக-வை அணுகவே இல்லை. அதற்கு விசிக-வும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. 

இந்த சூழலில், பாஜக கூட்டணியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ( 2014 சட்டமன்ற தேர்தல் தவிர) தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது பாமக. ஆனால், அவர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த தேர்தலில் இருந்ததைக் காட்டிலும் இந்த தேர்தலில் பாஜக-வின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. 

Continues below advertisement

அமைச்சரவையில் இடம் கேட்க முடிவு:

இதனால், இனியும் பாஜக கூட்டணியில் தொடர வேண்டுமென்றால் தங்களுக்கு ஏதாவது ஆதாயம் இருக்க வேண்டும் என்று பாமக தலைமை கருதுகிறது. இதனால், மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். 

உத்தரபிரதேசத்தில் உள்ள அப்னா தளம், பீகாரில் ள்ள ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சிகள் ஒரே ஒரு எம்பி மட்டுமே தங்கள் வசம் வைத்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் அமைச்சரவையில் பாஜக இடம் வழங்கியுள்ளது. ஆனால், தங்களுக்கு மட்டும் அமைச்சரவையில் இடம் வழங்க மத்திய பாஜக அரசு தயங்குவதாக பாமக-வினர் வருத்தத்தில் உள்ளனர். 

ஒப்புக்கொள்ளுமா பாஜக?

தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மிகப்பெரிய போட்டியாக களமிறங்கிய தவெக வரும் உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தலிலும் மிகப்பெரிய பலத்தை காட்டும் என்று கருதப்படுகிறது. அதிமுக கூட்டணியில் வாக்குகள் சிதறியதற்கு பாஜக கூட்டணியும் ஒரு காரணமாக கருதப்படும் சூழலில், இனியும் பாஜக கூட்டணியில் தொடர வேண்டும் என்றால் அமைச்சரவையில் இடம் அளித்தால் மட்டுமே தொடரலாம் என்று பாமக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாமக-வின் இந்த முடிவுக்கு பாஜக பச்சைக் கொடி காட்டுமா? அல்லது தடை விதிக்குமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். வட தமிழகத்தில் தங்களுக்கு என்று தனிப்பெரும் வாக்கு வங்கி வைத்துள்ள பாமக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முக்கிய கட்சிகள் கருதுகின்றனர்.  தற்போது பாமக வசம் 4 எம்எல்ஏ-க்களும் இருப்பதால் அவர்களின் வாக்குவங்கிகளை தக்கவைக்க அன்புமணியின் கோரிக்கையை பாஜக ஏற்குமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.