மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் ரூ.77,535/- மதிப்பீலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (03.10.2022) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 23 பயனாளிகளுக்கு ரூ.77,535/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 321 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 32 மனுக்கள் பெறப்பட்டது. 




மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது எனக்கூறினார்.


அந்த வகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.640/- வீதம் ரூ.3840/- மதிப்பீட்டில் ஊன்றுகோல்களையும், 5 பயனாளிகளுக்கு தலா ரூ.4999/- வீதம் ரூ.24,995/- மதிப்பீட்டில் காதுக்கு பின்னால் அணியும் காதொலிக் கருவிகளையும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், 1 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்கொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 10 பயனாளிக்கு தலா ரூ.4,870/- வீதம் ரூ.48,700/- மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டியையும் ஆக மொத்தம் 23 பயனாளிகளுக்கு ரூ.77,535/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள். 





அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட நடந்தை கிராமத்தில் பள்ளி செல்லா 21 குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளியில் மிண்டும் சேர்த்து கல்வி பயில நடவடிக்கை மேற்கொண்டமைக்காக  க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.மா.பரமேஸ்வரன் அவர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜா.குணசீலி ஆகியோரை பாராட்டி கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம்,  மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி,  தனித் துணை ஆட்சியர் சைபுதீன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.