Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
நேற்று போகி பண்டிகையுடன் பொங்கல் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மாலை தொடங்கி இரவு முழுவதும் வீடுகள், வீதிகளில் கலர் பொடிகள் கொண்டு வண்ணக் கோலமிட்டு பொங்கல் பண்டிகையை மக்கள் வரவேற்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அனைத்து இல்லங்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது.
பொங்கல் பண்டிகை 2026
உழவர்களின் பண்டிகையாகவும், தமிழர் திருநாளாகவும் அறியப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆங்கில நாட்காட்டியின்படி லீப் இயர் அடிப்படையாக கொண்டு இந்த பண்டிகை ஜனவரி 14 அல்லது ஜனவரி 15ம் தேதி கொண்டாட்டப்படுவது வழக்கம். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ம் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து ஜனவரி 16ம் தேதியான நாளை மாட்டு பொங்கலும், ஜனவரி 17ம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
அதிகாலையிலேயே கொண்டாட்டம்
இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் இல்லங்களை சுத்தப்படுத்தி வண்ணப்பூச்சுகளை அடித்து அழகுப்படுத்தினர். ஜனவரி 14ம் தேதியான நேற்று போகி பண்டிகையுடன் பொங்கல் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மாலை தொடங்கி இரவு முழுவதும் வீடுகள், வீதிகளில் கலர் பொடிகள் கொண்டு வண்ணக்கோலங்கள், சுண்ணாம்பு மற்றும் காவி கொண்டு டிசைன்கள் வரைந்து அழகாக்கினர். சந்தைகளிலும் பொங்கலை முன்னிட்டு கரும்பு, மஞ்சள் குழை, பூ, பனங்கிழங்கு போன்றவை விற்பனையும் களைக்கட்டியது. பலரும் புத்தாடைகளை வாங்கவும் குவிந்தனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை வரும் நிலையில் பலர் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பால் பொங்கி வரும்போது “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டும், குலவையிட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் பொங்கலிட நல்ல நேரமாக 10.30 மணி முதல் 11.30 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் காலையில் பொங்கலிட நினைப்பவர்கள் 7.30 மணிக்கு மேல் 9 மணிக்கு விடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராமங்கள், நகரங்களில் இன்றும், நாளையும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
சொந்த ஊர் திரும்பிய மக்கள்
பொங்கலை முன்னிட்டு சென்னை, பெங்களூரு, கோவை போன்ற பெருநகரங்களில் இருந்து சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து, ரயில்கள் மூலம் சொந்த ஊர் திரும்பி குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு சார்பில் ஜனவரி 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் பல்வேறு மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டது. அதேபோல் வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் தவிர்த்து பொங்கல் ஸ்பெஷல் ரயில்களும் இயக்கப்பட்டது. இந்த பொங்கலுக்கு ஜனவரி 14ம் தேதி முதல் ஜனவரி 18ம் தேதி வரை 5 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






















