சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள கமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு ட்ரூ ஜெட் நிறுவனம் சார்பில் தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவை நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் விமான சேவையை தொடங்க வேண்டும் என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.


சேலத்தில் மீண்டும் விமான சேவை:


நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பியதுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும் அவர் நேரில் சந்தித்து கோரிக்கை அளித்தார். இந்த நிலையில், இன்று முதல் சேலம் விமான நிலையத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கி உள்ளது. முதல் நாளான இன்று பெங்களூரில் இருந்து 12.40 மணிக்கு புறப்பட்டு 01.40 மணிக்கும் சேலம் வந்தடைந்தது.


இந்த முதல் விமானத்தில் 24 பயணிகள் பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு வருகை தந்தனர். சேலம் விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உள்ளிட்டோர் பயணிகளுக்கு மலர் கொடுத்தும் இனிப்புகள் வழங்கியும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



விமானங்கள் விவரம்:


இதேபோல் சேலத்தில் இருந்து மதியம் 02.05 மணிக்கு கொச்சிக்கு புறப்பட்ட விமானத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.


பெங்களூர் - சேலம்: 12.40-01.40, சேலம் - கொச்சி : 02.05-03.15 மணிக்கும், கொச்சி - சேலம் : 03.40-04.50 மணிக்கும், சேலம் - பெங்களூர் : 05.15-06.15 மணிக்கும் விமான சேவை நடைபெற உள்ளது. வாரத்தில் ஐந்து நாட்கள் இந்த விமான சேவையானது நடைபெற உள்ளது. அதன்படி திங்கள், செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து சேலம் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்ஆர் பார்த்திபன் கூறுகையில், " இன்று முதல் அலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பெங்களூர் -  சேலம் - கொச்சின் வழித்தடத்தில் விமானம் இயக்கப்பட உள்ளது. கொச்சின் - சேலம் -பெங்களூர் வழித்தடத்தில் மீண்டும் இயக்கப்படும். இதேபோன்று அக்டோபர் மாத இறுதியில் இன்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் 29 ஆம் பெங்களூர் -  சேலம் - ஹைதராபாத் வழித்தடத்தில் விமான சேவை  தொடங்கப்படுகிறது. மீண்டும்  ஹைதராபாத் - சேலம் - பெங்களூர் வழித்தடத்தில் விமானம் இயக்கப்படும்.


வாரத்தின் நான்கு நாட்களுக்கு இண்டிகோ விமான சேவை நடைபெறும் திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை , வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இந்த சேவை நடைபெறும். இதே போன்று வாரத்தின் ஏழு நாட்களிலும் சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை அளிக்க இண்டிகோ நிறுவனம் முன் வந்துள்ளது. சேலம் சென்னை விமான சேவையும் அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு விமான சேவை தொடங்குவதால் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வர்த்தகர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


சேலத்தில் இருந்து வெளிமாநிலத்தில் நாள் ஒன்றுக்கு ஐந்து முறை விமானங்கள் சேர்ந்து வந்து செல்லும் வாய்ப்பு கடும் முயற்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து விமான சேவை இரவு நேரத்திலும் நடைபெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் இரவு நேர விமான சேவையும் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையிலான சேவைகளும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.