தவெக தொண்டர்களால் பனையூர் மக்கள் அவதி: வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை என குடியிருப்போர் கவலை!
தவெக அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்களது வீடுகள் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு என பனையூர் குடியிருப்புவாசிகள் புகார்

தவெகவினரால் இடையூறு - பனையூர் குடியிருப்புவாசிகள் புகார்
வரும் சட்டமன்றத்த் தேர்தலில் போட்டியிட தவெக இன்று விருப்பமனு விநியோகம் செய்ய தொடங்கிய நிலையில், பனையூர் தவெக அலுவலகத்துக்கு வரும் தொண்டர்களால் இடையூறு ஏற்படுவதாக அந்தப் பகுதியின் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தவெக அலுவலகத்துக்கு வருபவர்கள் தங்களது வீடுகள் முன்பு வாகனங்களை நிறுத்திச் செல்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தங்களது வாகனங்களை வெளியே எடுக்க முடியவில்லை எனவும் பனையூர் குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விருப்ப மனு பெற பெரும்பாலான தவெக நிர்வாகிகள் வந்துக்கொண்டிருப்பதால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது. விருப்ப மனு விநியோகம் செய்யும் நாட்கள் வரை இதேபோன்ற நிலைமை இருந்தால் தாங்கள் என்ன செய்வது என்று பனையூர் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தவெக விருப்பமனு விநியோகம் இன்று தொடக்கம்
2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கியது. பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி வரை விருப்ப மனு விநியோகம் செய்யப்படுகிறது. இன்று 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக கட்சி தொடங்கி மூன்றாண்டு ஆன நிலையில், அதை சிறப்பாக பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் சிறப்பாக கொண்டாடினார். கட்சிதொடங்கி 3 ஆண்டுகள் ஆகி முதல்முதலாக அக்கட்சி போட்டியிடும் முதல் தேர்தல் இது. இதற்காக விருப்ப மனு தேதி அறிவித்திருப்பது அக்கட்சியின் தொண்டர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























