திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதை தவெக வழக்கமாக்கி கொண்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடைபெற்று தவெக அரசின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கி  இந்நிகழ்வின் முதல் நாள் நிறைவுற்றது. ஜூன் 19 முதல் ஜூன் 23 வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆளுநர் உரை பற்றி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு இன்று முதல்முறையாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சட்டமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். பொதுவாக ஆளுநர் உரை என்பது தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுப்பதாகும். தவெக அரசு அறிவித்த வாக்குறுதிகள், அதை செயல்படுத்தும் முறை தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையாக அது இருக்கும். ஆனால் இன்றைய ஆளுநர் உரை ஆளும் கட்சியின் ஆதரவாளர்கள் ரீல்ஸ் போடக்கூடிய அளவில் அமைந்திருக்கிறது. அந்தளவிற்கு முதலமைச்சர் விஜய் தன்னைப் பற்றியும், கட்சியைப் பற்றியும் தம்பட்டம் அடிக்கும் அளவுக்கு சுயபுராணம் பாடும் அளவிற்கு தான் இந்த ஆளுநர் உரை அமைந்துள்ளது. 

திமுக ஆட்சியில் முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தயாரித்து கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் முழுமையாக படிக்க மாட்டார். ஏகப்பட்ட திருத்தங்கள் செய்வார். இந்த முறை தவெக அரசு கொடுத்ததை ஒரு வார்த்தை கூட மாற்றாமல் அப்படியே வாசித்துள்ளார். இதன் மூலம் தவெகவுக்கு பாஜகவுக்கும் இடையே இணக்கம் உள்ளது என்ற எண்ணம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 

தவெகவின் சுயபுராணத்தை தவிர்த்து பார்த்தால் ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள விஷயங்கள் யாவும் திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டவை. அவற்றிற்கு வழக்கம்போல தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. இவர்கள் ஆட்சியின் தோல்விக்கான பழியைத் தூக்கி திமுக மீது தூக்கிப் போட்டுள்ளார்கள். மிகுந்த காழ்ப்புணர்ச்சியோடு ஆளுநர் உரை அமைந்துள்ளது. இரண்டு, மூன்று இடங்களில் திமுக அரசின் நிர்வாகம் சரியில்லை என சொல்லியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். அப்படி ஆட்சி நிர்வாகம் சரியில்லை என்றால் எப்படி பல திட்டங்களை திமுக நிறைவேற்றிருக்க முடியும்.. டெல்லியில் நிதிஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளைப் பற்றி பெருமையாக பேசினார். அவையாவும் தவெக ஆட்சியின் 30 நாட்கள் சாதனையா என்றால் இல்லை. 

Also Read: EPS: யாருங்க சொன்னா..! ”எனது மகன் மிதுன் அரசியலுக்கு வரமாட்டார்” - எடப்பாடி பழனிசாமி உறுதி

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சாதனைகள் தான். இந்த அரசு அமைந்து 38 நாட்கள் கடந்து விட்டது. தவெக சொல்வது, செய்வது எல்லாமே திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான். இது வெறும் காப்பி-பேஸ்ட் அரசாக மட்டும் தான் செயல்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.