விஜயலட்சுமி தன் மீதான அவதூறு குறித்த ஆதாரத்தை வெளியிட முடியுமா என்று நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 


தன்னை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து சீமான் ஏமாற்றி விட்டதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் நடிகை விஜயலட்சுமி காவல் துறையில் புகார் அளித்திருந்தார். 


நாம் தமிழர் கட்சியினர் ஆலோசனை கூட்டம்


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்ட்டத்தில் பங்கேற்பதற்காக அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊட்டிக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில், உதகையில் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் விஜயலட்சுமி குறித்து கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்துள்ளார். 


”நான் திருமணம் செய்ததாக கூறும் விஜயலட்சுமி அதற்கான புகைப்படம் இருந்தால் வெளியிடட்டும். நடிகை விஜயலட்சுமி குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு மக்கள் ரசிக்கக்கூடாது.  ஒரு நாள் நான் வெடித்துச் சிதறினால் ஒருவரும் தாங்க முடியாது. 13 ஆண்டுகளால இந்தப் பிரச்சனையை சந்தித்து வருகிறேன். சமூக மரியாதை உள்ள தன்மீது அவதூறு பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்று அவர் பத்து பேரிடம் புகார் அளித்தது என்னிடம்  உள்ளது. நேரம் வரட்டும் என்று இருக்கிறேன். என்னுடன் நிறைய பேர் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். திருமணம் செய்ததாக கூறினாலும் அதற்கான சட்டப்படி ஆதாரம் தேவைப்படுது இல்லையா? விஜயலட்சுமி விவகாரத்தில் மௌனமாக இருக்கிறேன் என்று என்னை நினைக்க வேண்டாம். நான் வெடித்துச் சிதறினால் யாரும் தாங்க மாட்டார்கள்.‌ பெரிய லட்சியங்களுடன் பயணித்துக்கொண்டிருக்கும் என்னை இரண்டு லட்சுமிகளை வைத்து அவதூறு செய்கிறார்கள். என்மீது அவதூறு பரப்புவர்களையே அதிகம் நேசிக்கிறேன். அவர்களால்தான் என்னால் இந்த அளவுக்கு உயர முடிந்தது. என்னை எதிர்கொள்ள முடியாதவர்கள் விஜயலட்சுமியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இது எனக்கு எதிரான அரசியல் கட்சிகளின் சதி'' பேசியிருக்கிறார்.


 ``நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சிசெய்த காங்கிரஸ், மக்களுக்கான பெரிய திட்டங்கள் எதையும் கொண்டு வரவில்லை. அதற்குப் பின்னர் வந்த பா.ஜ.க ஆட்சியிலும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இரண்டு கட்சிகளும் பெரும் முதலாளிகளுக்காகவே இருக்கின்றனர்.  கட்சி, தனிப்பட்டவர்களின் பொருளாதார முன்னேற்றத்துக்காகவே அனைத்தையும் செய்கிறார்கள்.  நாடாளுமன்றத் தேர்தலையே பல கட்டங்களாக நடத்தும் மத்திய அரசு, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையைக் கொண்டுவரவிருப்பதாகச் சொல்கிறது. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலை நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்துவதற்கான கட்டமைப்புகள் இல்லை. இதனால் வீண் செலவு மட்டுமே ஏற்படும். அதேபோல், நிலவுக்கு விண்கலம் அனுப்பு ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால், இதுவரை தூய்மைப் பணிக்கான தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் எதுவும் கிடையாது. நாட்டு மக்கள் பசியால் வாடுகிறார்கள்.  நிலவை ஆராய்ச்சி செய்கிறோம் என வீண் பெருமை பேசி, வீண் செலவு செய்கிறார்கள்.” என்று விமர்ச்சித்துள்ளார்