விழுப்புரம்: தமிழகத்தில் எத்தனையோ பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்து பெட்டி தரேன் என கூறினாலும் அதனை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் நாலு சீட்டுக்காக விற்பவன் நான் அல்ல சாதியை ஒழிக்கறதுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென சீமான் தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தலைமையிலான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் கலந்து கொண்ட சீமான் ஆண் குழந்தைக்கு ஆதி தமிழன் என பெயர் சூட்டினார்.


அப்போது மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான்...


திராவிடம் என்றால் என்ன என்றே திமுகவில் இருப்பவர்களுக்கு தெரியாது என்றும் பிரபாகரனை சந்தித்த போது நம் இனத்துக்கு வரலாறு என்பது கிடையாது வரலாறு படைப்பவர்களுக்கு ஏது வரலாறு என தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். பல லட்சம் சொற்களை கொண்ட மொழி தான் தமிழ் மொழி அதனை ஒழிக்க தான் தற்போது முற்படுவதாகவும், தமிழ் மொழி படித்தால் வேலை கிடைக்காது, சாப்பாடு கிடைக்காது என சொல்பவர்களை பச்சை மட்டை எடுத்து பிச்சுடுவேன் என கூறினார்.




திராவிட மாடல் என்பது கேவலப்பட்ட மாடல் என்றும் திமுக அதிமுக ஆட்சி காலத்தில் ஆடு மாடு கோழியை வளர்க்க கூறினார்கள் அதனை தான் நான் நாடு முழுவதும் வளர்க்க கூறுவதாகவும் எத்தனையோ பேர் தன்னை கூட்டணிக்கு அழைத்து பெட்டி தரேன் என கூறினார்கள். அதனை தான் ஏற்க மறுத்துவிட்டேன் நாலு சீட்டுக்காக விற்பவன் நான் அல்ல என தெரிவித்தார். எல்லாரையும்  கருணாநிதி படிக்க வைச்சதாக கூறுபவர்கள் ஸ்டாலினை சரியாக படிக்கவில்லையே எங்களை எல்லாம் குடிக்க வைச்சது தான் நீங்கள் செய்தது என குற்றஞ்சாட்டினார்.


தன்மானத்திற்காக உயிரை விட்ட இனம் தான் தமிழ் இனத்தவர்கள் என்றும் மாட்டுக்கறியை மருந்தாக எடுத்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சாதியை ஒழிக்கறதுக்காக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென கூறுகிறேன். இங்கு போஸ்ட் மாஸ்டர் முதலமைச்சராக உள்ளதால் கடிதமாக அனுப்பி வருகிறார். தெருவுக்கு, தெரு சாராயம் விற்பனை செய்துவிட்டு சட்டம் ஒழுங்கு சரியா இருக்கிறது என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்வது.


இதையும் படியுங்கள் !


‘நடிகர் விஜயுடன் இணைந்து செயல்படத் தயார்...ஆனால்...’  -  சீமான் வைத்த ட்விஸ்ட்


சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-


காதில் தேன் ஊற்றும் வேலை


2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலும், 2026-ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலும் நாம் தமிழர் கட்சிக்கானது. நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. 55 ஆண்டு கால கட்சிகளுடன் எங்களை ஒப்பிடாதீர்கள். எளியவர்கள் ஒருங்கிணைந்து புரட்சியை உருவாக்கி வருகிறோம். மகளிர் மசோதாவை செயலாக்கம் என்பது பா.ஜ.க.வின் வெறும் பேச்சு தான். கட்சியில் 33 சதவீத ஒதுக்கீடு உள்ளதா? காதில் தேன் ஊற்றும் வேலை தான் இது. மத்திய அரசும், மாநில அரசும் சரியில்லை. மத்திய அரசை குறை கூறும் மாநில அரசு செய்ய வேண்டியதை கூட செய்யவில்லை.




எல்லாம் நாடகம்


நீட் தேர்வை எதிர்த்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள். கையெழுத்து வாங்கி முடிவதற்குள் தேர்தல் தேதி அறிவித்து விடுவார்கள். யாரிடம் கொடுப்பது? எல்லாம் நாடகம். தேர்தலுக்கான அரசியல் தான், மக்களுக்கான அரசியல் இல்லை. பிரதமர் வேட்பாளராக தமிழரை பா.ஜ.க. நிறுத்தாது. இந்தியா ஒரு தேசியமா? ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஆனால், தண்ணீர் தர மறுக்கின்றனர். பிறகு எதற்கு ஒரே தேசியம், ஐக்கிய இந்தியா என கூறுங்கள்.


எல்லாவற்றையும் தனியாருக்கு விட்ட பிறகு எதற்கு தேர்தல்? டெண்டர் விட்டு இந்தியாவை கொடுத்து விடுங்கள். இந்த நாட்டில் நம்முடையது என ஏதாவது உள்ளதா? சாலை கூட தனியாரிடம், பிறகு எதற்கு அரசு? ஒன்றிற்கும் இல்லாத அரசுக்கு எதற்கு இவ்வளவு செலவு. வரலாற்றில் யார் பிழை செய்தது. பா.ஜ.க. பெண்களுக்கு எந்த திட்டத்தையும் இதுவரை செயலாக்கம் செய்யவில்லை, வெறும் பேச்சு தான். வங்கி கணக்கில் ரூ.15 லட்சம், 2 கோடி பேருக்கு வேலை என எதுவும் தரவில்லை. தமிழகத்தில் மட்டும் ஏன் திராவிடராக இருக்க வேண்டும்? வலிமைக்கு ஏற்ப அவர்கள் பலத்தை காண்பித்து வருகிறார்கள். தேர்தல் நேரம் என்பதால் இதுபோன்ற சோதனைகள் நடைபெற்று வருகிறது. திராவிட கட்சிகளை ஒழிக்காமல் எதிர்கொண்டு விஜய் கட்சி ஆரம்பிக்கிறார்.


ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும்


தங்களின் வலிமை காண்பிக்கவே பாஜக அமலாகத்துறை ரெய்டும், திமுக பா.ஜ.க-வினரை கைது செய்வதும் நடைபெறுகிறது, வருகின்ற தேர்தலுக்கான இந்த ரெய்டு கைதெல்லாம் நடைபெறுகிறது என்றும் விளம்பரத்துக்காக பேசும் ஆளுநர் ரவியை தவிர்க்க வேண்டும் தமிழக ஆளுநர் ரவி அடிப்படையில் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்பதால் அவர் விளம்பரத்துக்காக தினம், தினம் ஏதோ ஒரு கருத்தை கூறி வருகிறார். அவரை நாம் தவிர்க்க வேண்டும்.




சாதிவாரி கணக்கெடுப்பு 


சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு தான் எடுக்க வேண்டும். முதல்வர் எதற்காக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார் என்பது தெரியவில்லை.எந்த காலத்திலும் தேசிய, திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்பது கிடையவே கிடையாது.


நடிகர் விஜய்யுடன் இணைவது உங்களுக்கு மகிழ்ச்சி என்றால், நாங்கள் இரண்டு பேரும் இணைந்து செயல்படத் தயார். அவர் வர வேண்டும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் அவரது கொள்கைகளை சொல்ல வேண்டும், நான் தான் முன்னாடி நிற்கும் அண்ணன், அவர் தான் என்னோடு வருவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும், நான் போய் கேட்க முடியாது, அவர் கட்சி ஆரம்பிக்கும்போது அவரிடம் நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என அவரிடம் கேளுங்கள்.