சீமான் யார் என கேட்ட அமைச்சர் விஜய் பாலாஜியை ஓட விட்டு அடித்திருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவையில் போதை பழக்கம் பற்றி தகவல் சொன்னதால் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டது, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், போதையின் பிடியில் மாணவர்கள் சிக்கியுள்ளார். வீதிக்கு வீதி தமிழ்நாட்டில் டாஸ்மாக் உள்ளது. அரை நூற்றாண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆண்டும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. இப்போது பொறுப்பேற்ற தவெக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மது விலக்கு பற்றியும் பேசவில்லை. மகாத்மா காந்தி மது குடிப்பது பழக்க வழக்கம் அல்ல.. நோய் என சொன்னார். தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் போதையின் பிடியில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை மீட்டெடுப்போம் என சொன்னார்கள்.
போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்
தவெக ஆட்சிக்கு வந்ததும் 717, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்றோர் 500 கடைகளை மூடினார்கள். எனினும் மதுவின் விற்பனை குறையவில்லை. போதை ஒழிப்பை எப்படி செய்வீர்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என பேசினார். எதையும் செய்யாமல் முதலமைச்சர் விஜய் மராத்தானில் ஓடி போதையை விடு விளையாட்டை எடு என சொல்கிறார். போதையை போட்டு தான் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஐபிஎல் மேட்ச் பார்க்கபோன அமைச்சர் சரத்குமார் பொடியை இடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது விளக்கம் கேட்டால் குழந்தைக்கு காய்ச்சல் என சொல்கிறார். ஊருக்கே அவர் போதையை போட்டிருக்கிறார் என தெரியும் என கூறினார்.
மக்கள் துரோகம் செஞ்சிட்டாங்க
தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சி வாக்குக்காக பேசவில்லை. மக்கள் நல்வாழ்வுக்காக களத்தில் வலியை தாங்கிக் கொண்டு நிற்கிறோம். ஆனால் மக்கள் எவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டார்கள்.ஒரு அமைச்சர் சீமான் என்றால் யார் என கேட்கிறார். எவ்வளவு திமிரு, கொழுப்பு அவருக்கு இருக்கும். அந்த அமைச்சரை ஓட விட்டு அடித்திருக்க வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வருகிறது. அவர் சாகும் வரை அமைச்சராகவா இருக்கப் போகிறாரா?.. இல்லையென்றால் வாழ்நாள் முழுதும் விஜய் தான் முதல்வரா இந்த தேர்தலில் மக்கள் துரோகம் செய்து விட்டார்கள். 16 ஆண்டுகளாக நாங்கள் விலை போகாமல் மக்களுக்கு உண்மையாக இருந்தோம். எதிலும் சமரசம் செய்யவில்லை என இடும்பாவனம் கார்த்திக் பேசினார்.
யார் அந்த அமைச்சர்?
அவர் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி ஆவார். கடந்த ஜூலை 22ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. சேலத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி சீமான்னா யாருணா என்று கேள்வி எழுப்பியதோடு, எம்.எல்.ஏ, எம்.பி கேட்டால் கூட பதில் சொல்லலாம் சீமான் யார்? என பதில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
