Tirupur  திருப்பூரில் தமிழர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வடமாநிலத்தவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 


கடந்த வாரத்தில் தமிழ்நாட்டின் தொழில் நகரங்களில் ஒன்றான திருப்பூரில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழர்களை பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு அடித்து விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அடுத்து தமிழர்கள் காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து பீகாரைச் சேர்ந்த  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் மீது சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல், ஆயுதங்களுடன் ஒன்று கூடுதல், வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய தமிழக இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


தமிழ் தொழிலாளர்கள் தாக்கப்பட்ட  வீடியோ குறித்து நகைச்சுவை பேச்சாளரும், நடிகருமான மதுரை முத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆதங்கப்பட்ட மதுரை முத்து:


அதில், அவர் கூறுவதாவது, "திருப்பூரில் 100 வடமாநில இளைஞர்கள் 100 பேர் கத்தி, பெல்ட், மரக்கட்டைகளைக் கொண்டு நமது தமிழ் இளைஞர்களைத் தாக்கும் விடியோவைப் பார்த்தேன். லேசாக வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10 சதவீதம் இருந்தார்கள். இன்று திருப்பூரில் 65 சதவீதம் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். தற்போது  குடி புகுந்து வந்தவர்கள் விரட்டி அடிக்கும் அளவிற்கு ’தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள்’.


தமிழ் இளைஞர்கள் பாலாபிஷேகம் செய்கிறீகள் அவன் (வடமாநில இளைஞர்கள்) இன்னும் கொஞ்ச நாட்களில் பால் ஊத்திவிட்டு போகப் போகிறான். வேலை வாய்ப்பே இல்லாமல் போனால், பிச்சை எடுக்கும் கால கட்டத்துக்கு தமிழ் இளைஞர்கள் வருவார்கள். நான் வாட்ஸ்-அப்பில் பார்க்கிறேன் செட்டியார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் தெரு என வந்து கொண்டு இருக்கிறது, இனி வடக்கன் தெரு என வரும்.


விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்:


அவர்கள் ரேசன் கார்டு வாங்கிவிட்டார்கள். வட இந்தியர்கள் தமிழ் இளைஞர்களை விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. வட இந்தியாவில் இந்தி தெரியாமல் நம்மால் 2 நாட்கள் தங்க முடியவில்லை. அவர்கள் இங்கு வந்து நம்மை விரட்டி அடிக்கும் அளவிற்கு நாம் அவ்வளவு அசால்டாக இருக்கிறோம். தமிழ் இளைஞர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார். 






திருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனங்களில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களை சேர்ந்த இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் பின்னலாடை தொழிலாளர்கள் விட வட மாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.


பின்னலாடை நிறுவனத்திற்கு அருகே உள்ள பெட்டிக் கடையில் சிகரெட் புகைக்கும் போது, வட மாநில தொழிலர்களுக்கும், தமிழக தொழிலாளர் ஒருவருக்கும்  இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. 


இதையடுத்து வட மாநில தொழிலாளர், தன்னுடன் வேலை செய்யும் சக வட மாநிலத்தவர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் பெல்ட், உருட்டு கட்டை போன்ற ஆயுதங்களுடன் தாக்க வந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 


இந்த விவகாரம் குறித்து இந்த சம்பவம் கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடந்த சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என காவல் துறை தரப்பில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.