தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தொடங்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக எடுத்து வருகிறது. மாவட்ட நிர்வாகத்திற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:


இந்த நிலையில், மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது, “ சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முடியாமல் இருந்தால் அதைச்சுற்றி வேலி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்ட ஆட்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். மழைநேரத்தில் அனைவரும் கரம் கோர்த்து செயல்பட்டு மக்களை காக்கும் பணியில் ஈடுபடுவோம்.


சென்னையில் மழைநீர் பாதிக்கப்படும் பகுதிகளில் தன்னார்வலர்கள் உதவிகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்படும் மக்கள் 1913 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான முன்னெச்சரிக்கை பணிகளை செய்ய சென்னையில் மண்டல வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு தயார்:


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. 20 செ.மீட்டருக்கு மேலான மழைப்பொழிவு இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டு வருகிறது. பொதுமக்களும் உயிரும், உடைமையும் காக்கப்பட வேண்டும் என்பதே அரசின் நோக்கம். மொத்தம் 150 பேர் பணிபுரிந்து வருகி்னறனர். அவர்கள் பொதுமக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் வழங்குகின்றனர்.


சமூக வலைதளங்களிலும் மழை தொடர்பான தகவல்கள் மக்களுக்கு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் தேங்கினால் பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டுள்ள 31 இடங்கள் ஆழப்படுத்தப்பட்டு சுத்தப்பட்டுள்ளன. சென்னையில் அனைத்து வார்டுகளிலும் நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளம் மூலம் அலர்ட்:


அந்தப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் உணவு, குடிநீர் போன்ற விஷயங்களை அரசு அதிகாரிகளுடன் பேசி அலர்ட் செய்வார்கள். இதுமட்டுமின்றி தமிழ்நாடு அலர்ட் என்ற புதிய செயலியும் உருவாக்கியுள்ளோம். அதை மக்கள் பயன்படுத்தலாம். வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். கழிவுநீர் பாதைகள் பற்றி மாநகராட்சிக்கு மக்கள் சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கலாம்.


தரைமீதான அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு மின்சார வாரியத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிப்பு அடையாத வகையில் அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். மெட்ரோ வாட்டருக்கு கீழ் 356 பம்பிங் ஸ்டேஷன் பணிபுரியும் வகையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு தரும்  வழிகாட்டுதல்களை பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.”


இவ்வாறு அவர் பேசினார்.