என்எல்சி நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 37 பாமகவினரை கடலூர் காவல்துறை கைது செய்துள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. 


அந்த செய்திக் குறிப்பில், “அரசுத்துறை நிறுவனமான என்எல்சி (NLC) 15 ஆண்டுகளுக்கு முன்பு இழப்பீடு வழங்கி நிலங்களை கையகபடுத்திய நிலங்களில் பரவலாறு கால்வாய் மாற்றுபாதை திட்டத்தின் மூலம் வெட்டும் பணியை மேற்கொண்டனர். இதனை அடுத்து பா.ம.க கட்சியினர் சாலை மறியல், சாலைகளில் டயர் எரிப்பு, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டனர். இது சம்பந்தமாக 21 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  NLC நிறுவனத்தை வெளியேறுமாறு முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். இதற்கு போலீஸ் அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும், 28.7.2023 ஆம் தேதி 12 மணிக்கு பாமகவினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் திரண்டு வந்து ஆர்ப்பாட்டமும், கண்டனம் கோஷங்களும் முழங்கினர். முடிவில் என்எல்சி நிறுவனத்தை முற்றுகையிட NLC ஆர்ச் கேட்டில் நுழைய முயற்சி செய்தபோது தடுத்து நிறுத்திய போலீசார் மீது பாமக தரப்பினர் தண்ணீர் பாட்டில் வீசியும், கற்களை வீசியும் தாக்குதல் நடத்தினர். 



கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தண்ணீர் பீச்சியும், கண்ணீர் புகை வீசியும் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதி சூழ்நிலைக்கு கொண்டுவந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாத்தனர். பின்பு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமக கட்சியினர் 197 நபர்களை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து, வடகுத்து KNT மஹாலில் வைக்கப்பட்டு, பின்னர் மாலை விடுவிக்கப்பட்டார்கள்.



அதேபோல் வடக்கு மண்டலத்தில் பல்வேறு காவல் நிலைய எல்லைகளில் சுமார் 90 சாலை மறியல் போராட்டங்கள் நடத்த முற்பட்ட சுமார் 2000 பாமகவினரை தடுப்பு நடவடிக்கையாக கைது செய்து பின்னர் மாலை விடுவிக்கப்பட்டனர். இது தொடர்பாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்து. மேலும், மேற்படி வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நெய்வேலி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து ஆகாஷ் உள்ளிட்ட 26 நபர்களை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுள்ளனர்.



சட்டத்துக்கு முரண்பட்ட இரண்டு இளம்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். பாமக தலைவர் கைதை தொடர்ந்து 4 இடங்களில் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றது. மேலும் கடந்த 26.7.2023 மற்றும் 28.7.2023 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட கல்வீச்சு வழக்குளில் 11 நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்”  என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்கு முன்னதாக, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக பணியை என்.எல்.சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால் நிலங்களை கையகப்படுத்தும் பணி கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது.  சோத்தியாதோப்பு அருகே கத்தாழை, கரிவட்டி, ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது.  பயிர் செய்யப்பட்ட வயல்களில்  இராட்சத எந்திரங்களை இறக்கி என்.எல்.சிக்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகளில் என்.எல்.சி நிறுவனம் ஈடுபட்டது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.   தற்போது அங்கு நெற்பயிற்கள் அறுவடைக்கு கூட தயார் ஆகாத நிலையில் பச்சை பயிற்களை அழித்து கால்வாய் வெட்டுவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவாக பாமகவினர் போராட்டம் நடத்தினர்.