New train service : தாம்பரம் டூ திருச்சிக்கு புதிய ரயில்... ராமேஸ்வரம் முதல் திருப்பதிக்கு கூடுதல் சேவை- எப்போ தெரியுமா.?
ரயில்களில் நாளுக்கு நாள் கூட்ட நெரிசல் அதிகரித்து வரும் நிலையில் தாம்பரம் முதல் திருச்சிக்கு புதிய ரயில் இயக்கப்படவுள்ளதாகவும், ராமேஸ்வரம் முதல் திருப்பதிக்கு கூடுதல் ரயில் சேவையும் அறிமுகம் செய்யப்பட்டவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில்களில் மக்கள் கூட்டம்
நீண்ட தூர பயணம் செய்வதற்கு ரயில் சேவையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாகவே ரயில்களில் கூட்டமானது நிரம்பி வழிகிறது. அந்த வகையில் ரயில் சேவைகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தாம்பரம் முதல் திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில் சேவை நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘திருச்சிராப்பள்ளி – தாம்பரம் – திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்’ ( 16808/16807) வாரத்தில் 5 நாட்கள் (செவ்வாய் மற்றும் புதன்கிழமை தவிர) இயக்கப்படும். இந்த புதிய ரயில் சேவை 01 மார்ச் 2026 முதல் திருச்சிராப்பள்ளி மற்றும் தாம்பரம் ஆகிய இரு மார்க்கத்தில் இருந்து தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களில் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம் - திருச்சி ரயிலில் 2 ஏசி சேர் கார்கள், 8 சேர் கார் பயணிகள் வண்டிகள், 6 பொதுத் தர இரண்டாம் வகுப்பு வண்டிகள், 1 மாற்றுத்திறனாளிகளுக்கான இரண்டாம் வகுப்பு வண்டி மற்றும் 1 லக்கேஜ்-கம்-பிரேக் வேன் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நேர அட்டவணை (Train No.16808 – திருச்சிராப்பள்ளி முதல் தாம்பரம்)
காலை 5.35 மணிக்கு திருச்சிராப்பள்ளியில் இருந்து புறப்பட்டு, திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதரம்பரம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
ரயில் நேர அட்டவணை (Train No.16807 – தாம்பரம் முதல் திருச்சிராப்பள்ளி)
மாலை 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் இரவு 10.40 மணிக்கு திருச்சிராப்பள்ளி வந்தடையும். செங்கல்பட்டு,மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், மயிலாடுதுறை, சீர்காழி,தஞ்சாவூர், வழியாக திருச்சியை சென்றடைகிறது. இதே போல ஏற்கனவே ராமேஸ்வரம் - திருப்பதிக்கு இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி - ராமேஸ்வரம் சேவை அதிகரிப்பு
பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து ராமேஸ்வரம்- திருப்பதி- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை நாட்கள் வாரத்திற்கு 3 நாட்களில் இருந்து 4 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. (ரயில் எண் 16780) வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வந்த இந்த ரயில், இனி செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் எனவும் மார்ச் 3ஆம் தேதி முதல் இந்த ரயில் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.























