நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் அமைந்திருக்கும் கிருபா நகரில் வட மாநில தொழிலாளர்களால் விநாயகர் சிலை தயாரிப்பு கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட பகுதிகளை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டியினர் விநாயகர் சதுர்த்திக்காக சிலை வாங்க ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.


இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து மாதிரிகள் சேகரித்து சென்று ஆய்வு மேற்கொண்டதில் இரசாயன கலப்பு இருப்பது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்புக் கூடத்தை இரும்பு தகடுகள் கொண்டு பூட்டி சீல் வைத்தனர். இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த மூன்று தினங்களாக போராட்டம் நடத்திய நிலையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத சூழலில் உயர்நீதிமன்றத்தில் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபடும் வட மாநில தொழிலாளர் பிரகாஷ் என்பவர் தொடுத்த வழக்கில் சிலைகளை விற்பனை செய்ய தடை இல்லை என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் சிலைகளை பெற்றுக் கொள்வதற்காக பாளையங்கோட்டை பகுதிக்கு வந்து உயர்நீதிமன்ற உத்தரவை காட்டியும் காவல்துறையினர் சிலைகளை கொடுக்க மறுத்ததால் இருதரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வருவாய்த்துறையினர்தான் சிலைகளை ஒப்படைக்க வேண்டும் காவல்துறையினர் பாதுகாப்பு மட்டுமே வழங்குகிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வருவாய்த்துறை அதிகாரிகள் வர காலதாமதம் ஆன நிலையில் இந்து முன்னணி அமைப்பினர் தடையை மீறி நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுத்துச் செல்ல முயற்சித்த போது போலீசாருக்கும் இந்து முன்னணி அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.




தொடர்ந்து வருவாய்துறையினர் அப்பகுதிக்கு வந்த நிலையில் நீதிமன்ற உத்தரவை காட்டி சிலைகளை எடுக்க முயற்சித்தனர். ஆனால் எந்த உடன்பாடும் எட்டப்படாமல் தொடர்ந்து போராட்டம் நீடித்து வந்தது. சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நடந்த போராட்டத்தில் வருவாய்துறை, காவல்துறை, சிலை வாங்க வந்த தரப்புக்கும் இடையே வாக்குவாதம் மட்டுமே நடந்த நிலையில் எந்த முடிவும் கிடைக்காத சூழலில் வடமாநில தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரம் சிலைகள் விற்பனை செய்வதால் மட்டுமே இருக்கிறது.. ஒரு வருடம் இதற்கு கடும் பாடுபட்டோம் என அதிகாரிகளிடம் தெரிவித்து மன்றாடினர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் நடக்காத நிலையில் வட மாநில தொழிலாளரான ஜெகதீஸ் உடலில் டர்பன்டைன் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர துணை ஆணையாளர் ஆதர்ஷ் பச்சரா சிலை தயாரிப்பாளர்கள் மற்றும் இந்து அமைப்பினருடன் பேச்சு வார்த்தை நடத்தி நீதிமன்ற வழிகாட்டுதல் படியும் அடையாள அட்டைகளை ஒப்படைத்தும் சிலைகளை எடுத்துச் செல்ல அறிவுறுத்தினார்.


பின்னர் ஒப்புதல் கடிதத்தை இந்து அமைப்பினர் எழுதிக் கொடுத்துவிட்டு சிலைகளை பெற்றுச் சென்றனர். ஆறு மணிநேர போராட்டத்திற்கு பின்னர் விநாயகர் சிலைகள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பட்டாசுகள் வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சென்றனர். பல மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில் கிருபா நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்..