நாமக்கல் அடுத்த பரமத்தி வேலூரில் 73 வயதான தந்தைக்கு காது குத்தி, மகள்கள் அழகு பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுாரைச் சேர்ந்தவர் 73 வயதான வரதராஜன். இவர் டி.வி.எஸ்., நிறுவனத்தில், 'பார்சல்' லாரி டிரைவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள்கள் சாந்தி (47), ஷோபனா (42), ஹாமலா (39), சங்கீதா (35), மகன் செந்தில்நாதன் (45) ஆகிய ஐந்து பேருக்கும் திருமணமாகி விட்டது.


அதேபோல், இவருக்கு எட்டு பேர குழந்தைகள் உள்ளனர். மனைவி கடந்த ஆண்டு இறந்து விட்டார். தற்போது மகனுடன் வசிக்கிறார். வரதராஜன் எதார்த்தமாக தனது பேர குழந்தைகளுடன் விளையாடும் போது, தனக்கு சிறு வயதில் காது குத்தவில்லை என்பதை விளையாட்டாக கூறியுள்ளார். இதை கேள்விப்பட்ட நான்கு மகள்களும், தந்தைக்கு காது குத்தி, நீண்ட நாள் ஆசையை நிறை வேற்ற முடிவு செய்தனர்.




இதையடுத்து, சேந்தமங்கலம் அருகே நைனாமலை பொன் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதராஜனுக்கு நேற்று முன்தினம் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. இந்த விழாவில் மகன், மகள்கள், உறவினர்கள், நண்பர்கள் என நிறைய பேர் பங்கேற்றனர்.


இதுகுறித்து வரதராஜன் தெரிவிக்கையில், “சிறு வயதில் எனக்கு காது குத்த வைத்திருந்த தோடு, துணிகள் திருடு போனது. தாயும் இறந்து விட்டதால், காது குத்தாமல் விட்டு விட்டனர். இது என் மனதில் நீண்ட நாட்களாக பெரும் குறையாகவே இருந்தது. அதை என் மகள்கள் நிறைவேற்றியுள்ளனர். இந்த நிகழ்வால், நான் குழந்தையாகவே உணர்கிறேன். வயதான பெற்றோர்களின் தீராத ஆசைகளை, பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும்." இவ்வாறு அவர் கூறினார்.


தந்தைக்கு மகள்கள் காது குத்து விழா நடத்தியது பரமத்தி வேலூர் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.