'ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள்? என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா?' என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா குறித்து அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

அரசியலமைப்பின் அடிப்படைக் கூடத் தெரியாமல் அமைச்சராகியுள்ள நிர்மல் குமார். “மோடி, அமித்ஷா ஆகியோர் தங்கள் சொந்தக்காரர்களைக் கூட ஆளுநர்களாக நியமிக்கலாம்” என பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் தெரிவித்துள்ள கருத்து கடும் கண்டனத்திற்குரியது. 

Continues below advertisement

 

பாரத மக்களையே தனது குடும்பமாக எண்ணி, பல பத்தாண்டுகளாக மக்கள் சேவையில் தன்னை அர்ப்பணித்து வாழும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் மாண்பைக் குறைக்கும் வகையில் நீங்கள் வைத்துள்ள பொறுப்பற்ற விமர்சனங்கள், உங்கள் அரசியல் அறிவின்மையையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

தங்கள் ஆட்சியில் சீரழிந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கு, பெருகி வரும் பாலியல் குற்றங்கள், வன்முறைகள், சொந்தக் கட்சியினரின் அட்ராசிட்டிகள் உள்ளிட்டவைகளை மறைத்து மக்களை மடை மாற்றுவதற்கு, வெறுப்பரசியலைக் கையிலெடுக்கும் உங்களுக்கும் திமுகவுக்கும் எந்த வித்தியாசமுமில்லை. 

எனவே, அரசியலிலும், கல்வியிலும், மக்கள் சேவையிலும் அனுபவம் வாய்ந்தவர்களை ஆளுநர்களாக நியமித்து வரும், பாரதப் பிரதமர் மீது இப்படியொரு கீழ்த்தரமான விமர்சனத்தை வைத்ததற்கு நீங்கள் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அரசுப் பதவியில் இருக்கும் நீங்கள் இனியும் இதுபோன்ற ஆதாரமற்ற அரைகுறை விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். 

மேலும், ஆட்சியமைத்த பிறகு ஆளுநரே தேவையில்லை என வெட்டி வீராப்பு காட்டும் நீங்கள், தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க முடியாமல் எத்தனை முறை ஆளுநர் மாளிகைக்கு சென்றீர்கள்? ஆட்சியமைப்பதற்காக தொலைபேசியில் யார் யாரையெல்லாம் தொடர்பு கொண்டீர்கள்? என்ற பட்டியலை நான் வெளியிடட்டுமா? எனவே, இனியும் இதுபோன்ற “அரசியல் ஸ்டண்ட்” களை செய்யாதீர்கள் அமைச்சரே. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.