சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாய் உடைப்பு விவகாரம்: மீனவ மக்கள் அச்சப்பட தேவையில்லை - அமைச்சர் மெய்யநாதன்

குழாயை நிரந்தரமாக அகற்றுவது குறித்து வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட உள்ளது.

Continues below advertisement

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் கச்சா எண்ணெய் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வரும் நிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். வருகின்ற 16 ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனவும் மீனவ மக்கள் அச்சப்பட தேவையில்லை என அமைச்சர் உறுதி அளித்தார்.

Continues below advertisement

நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சார்பாக பதிக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் குழாயில் கடந்த 2 ஆம் தேதி இரவு உடைப்பு ஏற்பட்டது. குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கடலில் கலந்த காரணத்தால் அப்பகுதி மீனவர்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி 5 நாட்கள் கடலுக்கு செல்லாமல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து 3, 4 , 5 ஆகிய தேதிகளில் மூன்றுமுறை குழாய் உடைப்பை சரி செய்ததாக  சிபிசிஎல் நிர்வாகம் அறிவித்தனர். அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் எண்ணெய் உள்ளிட்ட எந்தவித எரிவாயுக்களையும் குழாயில் கொண்டு செல்லக்கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால் நாகூர் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு தொழிலுக்கு சென்றனர்.


இதனிடையே குழாயில் கச்சா எண்ணெய் செலுத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்த நிலையில், நேற்றைய முன்தினம் 10 ஆம் தேதி  பம்பிங் செய்ததால் வானுயரத்தில் கச்சா எண்ணெய் பீய்ச்சி அடித்து கடலில் கலந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த மீனவர்கள் கடற்கரையில் மீண்டும் திரண்டனர். சரி செய்யப்பட்ட அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் துர்நாற்றம் வீசியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். பம்பிங் செய்வது நிறுத்தப்பட்டதால் எண்ணெய் கசிவு குறைந்தது. இந்த சூழலில் நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பாதிப்புகள் மற்றும் குறைகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறுகையில், “நாகை அடுத்த நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் சிபிசிஎல் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டது. சிபிசிஎல் நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுத்து தமிழக முதல்வரின் கண்காணிப்பில் குழாய் உடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. குழாயை நிரந்தரமாக அகற்றுவது குறித்து வருகின்ற 16 ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட உள்ளது.  எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவே மீனவ மக்கள் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola