நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த வேலையற்ற இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களுக்கு சுயதொழில் மற்றும் முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கிலும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பல்வேறு சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தற்போது ஜவுளித்துறையில் உள்ள பிரம்மாண்ட வேலைவாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தாட்கோ மற்றும் முன்னணி தனியார் நிறுவனம் இணைந்து நடத்தும் சிறப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இத்திட்டம் குறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

Continues below advertisement

வழங்கப்படும் அதிநவீனப் பயிற்சிகள்

இன்றைய காலகட்டத்தில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறை (Textile and Apparel Industry) உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு துறையாகும். இதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் நிபுணத்துவம் பெற்று, தங்களின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையில் பின்வரும் இரு முக்கியப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

1. ஜவுளி வடிவமைப்பு உற்பத்திப் பயிற்சி (Diploma in Textile Industry Course): இப்பயிற்சியின் மூலம் நவீன ஜவுளி உற்பத்தியின் அடிப்படைகள், ஆடை வடிவமைப்பு முறைகள் மற்றும் தொழில்துறை சார்ந்த தொழில்நுட்பங்கள் விரிவாகக் கற்றுத்தரப்படும்.

Continues below advertisement

2. துணிகளுக்கு சாயம், ஓவியம் மற்றும் அச்சிடுதல் பயிற்சி (Certificate in Textile Painting, Dyeing & Printing Course): ஆடைகளை அழகுபடுத்தும் கலைநயம் மிக்க பிரிவான சாயம் போடுதல், துணிகளில் வண்ண ஓவியங்கள் வரைதல் மற்றும் நவீன அச்சிடுதல் (Printing) தொழில்நுட்பங்கள் குறித்த செயல்முறைப் பயிற்சிகள் இதில் அடங்கும்.

பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்

இப்பயிற்சித் திட்டத்தில் இணைந்து பயனடைய விரும்புவோர் பின்வரும் தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

சமூகத் தகுதி : விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பு (12th Standard) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 35 வயதுக்கு மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

ஆண்டு வருமானம்: குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 3.00 இலட்சத்திற்குள் (ரூபாய் மூன்று லட்சம்) இருக்க வேண்டும்.

பயிற்சி காலம் மற்றும் தங்கும் வசதி

இப்பயிற்சிகளுக்கான மொத்த கால அளவு நான்கு மாதங்கள் (4 Months) ஆகும். இப்பயிற்சிகள் அனைத்தும் தமிழகத்தின் முன்னணி தொழில் நகரமான கோயம்புத்தூர் மாவட்டத்தில் வைத்து தகுதியான பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், கோயம்புத்தூரில் தங்கிப் படிப்பதற்கான முழு விடுதிச் செலவு மற்றும் உணவுச் செலவினங்கள் அனைத்தையும் தாட்கோ நிறுவனமே ஏற்கும் என்பதால், ஏழை எளிய மாணவர்கள் எவ்வித கட்டணமுமின்றி இப்பயிற்சியினை மேற்கொள்ளலாம்.

மாதம் ரூ. 50,000 வரை வருமானம் ஈட்ட அரிய வாய்ப்பு!

நான்கு மாத காலப் பயிற்சியினை முழுமையாகவும் வெற்றிகரமாகவும் முடிக்கும் இளைஞர்களுக்கு, அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் வழங்கப்படும். இதுமட்டுமின்றி, பயிற்சி அளிக்கும் தனியார் நிறுவனத்தின் மூலமாகவே தகுதியான நபர்களுக்கு 100% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.

முக்கிய அம்சம்: இப்பயிற்சியை முடித்து வேலைவாய்ப்பு பெறும் இளைஞர்களுக்கு, அவர்களின் திறமையின் அடிப்படையில் ஆரம்ப கால மாதாந்திர ஊதியமாக ரூ. 25,000/- முதல் ரூ. 50,000/- வரை ஈட்டுவதற்கான பிரகாசமான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இது இளைஞர்களின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்பிற்குப் பெருந்துணையாக அமையும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பயிற்சியில் சேர்ந்து பயன்பெற ஆர்வமுள்ள தகுதியுடைய நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

இப்பயிற்சித் திட்டம் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் குறித்து கூடுதல் விபரங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை நேரில் அணுகலாம்.

அலுவலக முகவரி: அறை எண்: 321 மற்றும் 327, 3-வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம். தொலைபேசி எண்: 04365-250305

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, உயர்தரப் பயிற்சியினைப் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.