மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. மாலை துவங்கிய மாநாட்டில் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள், மடாதிபதிகள், பா.ஜ.க., நிர்வாகிகள், ஆன்மீகம் சார்ந்த நபர்கள் என ஏராளமானோர் பேசினார்கள்.
 
திருப்பி அடிப்பேன் என்பதற்கு தான் இந்த மாநாடு - அண்ணாமலை
 
அப்போது பேசிய பா.ஜ.க., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை...,” மாநாட்டு பெய்வது மழைத்துளிகள் அல்ல. சிந்தாத்தை தாங்கி பிடித்து, வெட்டி படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான கண்ணீர் துளிகள். இந்த கூட்டம் சாதாரணமான கூட்டம் இல்லை, ஒரு இனம் தனது குரலை உரக்க சொல்கிறது. உலகத்தில் யூதர்கள் 0.2 விழுக்காடு உள்ள இஸ்ரேல் தனது வாழ்வியலை தொந்தரவு செய்ததற்காக  4 நாடுகளுடன் சண்டையிடுகிறார்கள். இந்தியாவில் ஆப்ரேசன் சிந்தூர் நடத்தப்பட்டால் இங்கு சிலருக்கு பிரச்னை. நம் ஊரில் தான் நம்முடைய வாழ்வியல் முறையை தொந்தரவு செய்து, இந்து மதம் என்பதற்காக பஹல்காமில் சுட்டுகொன்றார்கள். நம் கண் முன்னால் நாமும் எழுந்து நிற்கிறோம் எழுந்து நிற்பேன், திருப்பி அடிப்பேன் என்பதற்கு தான் இந்த மாநாடு.
 
வாழ்வியல் முறையை பாதுகாத்து கொடுக்க வேண்டும்
 
நம் வாழ்வியல் முறைக்கு எதிராக தொடர்ச்சியாக கோவிலுக்கு எதிராக பேசுகிறார்கள். எங்களின் குழந்தைகள் விபூதி பூச வேண்டும், ருத்ராசம் அணிந்து பள்ளிக்கு செல்ல வேண்டும், என்பதற்கான கூட்டம் தான் இது. ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை மணியாக இருக்கும். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளும் ஒவ்வொன்றை சொல்கிறது. இங்குள்ள முருகபக்தர்களை எந்த வீட்டில் வைக்க வேண்டும் என்பதை ஆளும் அரசு தான் முடிவெடுக்க வேண்டும். திருப்பரங்குன்றத்திற்கு பிரச்னை என்றால் சூரசம்ஹாரம் செய்து திருத்தணிக்கு சென்றுவிடுவோம். ஒவ்வொரு இந்துவுக்கும் இந்த எழுச்சி இருக்க வேண்டும். நமது வாழ்வியல் முறையை வரும்கால சந்ததியினருக்கு பாதுகாத்து கொடுக்க வேண்டும்
 
கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல் உள்ளது
 
தமிழகத்தில் 44 ஆயிரம் ஆலயங்கள் அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. ஆயிரமாண்டு பழமையான 344 கோயில்கள் உள்ளது. ஆன்மீகத்தை முன்வைத்து இந்த சமுதாயம் நடக்க வேண்டும். இங்கு வந்த முருகபக்தர்கள்  போகும் போது வீரபாகுவாக திரும்ப வேண்டும். 2055 முடியும் போது உலகத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக மாறவுள்ளது. நம்முடைய கலாச்சார சின்னங்கள் அழிய கூடாது. ஒருவர் கூட மதம்மாறக்கூடாது மதமாறியவர்களை மீண்டும் திரும்ப கொண்டுவர வேண்டும். எந்த மொழிக்கு இல்லாதது தமிழுக்கு உண்டு, தமிழும் ஆன்மீகமும் ஒன்றாக உள்ளது பெருமை. கந்த சஷ்டி கவசம் பாடினால் பிரச்னைகள் காணாமல் போகிவிடும், கந்த சஷ்டி கவசத்தில் அறிவியல் உள்ளது. தமிழ்மொழியில் ஆன்மீகமும், அறிவியலும் கலந்துள்ளது.
 
மாநாட்டிற்கு முன்பு பின்பு
 
செல்பி எடுப்பதற்காக விபூதியை அழித்தவர்கள் ஓட்டுப்பிச்சை கேட்டு்வருவார்கள். அப்போது பதில் அளிக்க வேண்டும். கோயிலை சார்ந்த நகரங்கள் தான் பாதுகாப்பாக நிற்கிறது. திமுக கட்சிக்கு சொல்கிறேன், கோயில்களை சார்ந்து இருந்தால் தான் தமிழகம் 5400 ஆண்டுகள்  பழமையானதாக உள்ளது. திருப்பதி கோயிலின் சொத்து 2லட்சத்தி 47ஆயிரம் கோடியாகும், எனவே ஆன்மீகம் சார்ந்த அரசியல், பொருளாதாரம் வரும்போது தான் நிம்மதியாக இருக்க முடியும். எப்போதும் ஆண்டவன் நம்மோடு இருக்கிறார். இனி தமிழ்நாட்டில் மதுரை முருகர் மாநாட்டிற்கு முன்பு பின்பு என தான் அரசியல் இருக்கும்” என்றார்.