வடை வாங்கித் தந்து சிறுமியிடம் அத்துமீறல்: மரக்காணம் அருகே 62 வயது முதியவர் கைது!
ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, ஐந்தாம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள நடுக்குப்பம் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 62). ஆசாரி வேலை செய்து வரும் இவர், பகுதி நேரமாக கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். சம்பவத்தன்று, இப்பகுதியைச் சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் அவ்வழியாகச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கன்னியப்பன், அந்தச் சிறுமியை அழைத்து, அருகில் உள்ள கடையில் தனக்கு வடை வாங்கி வருமாறு பணம் கொடுத்து அனுப்பியுள்ளார்.
பாலியல் அத்துமீறல்:
சிறுமியும் அவர் சொன்னபடியே கடக்குச் சென்று வடை வாங்கி வந்து கொடுத்துள்ளார். இதையடுத்து, வாங்கிய வடையில் ஒன்றை அந்தச் சிறுமிக்குக் கொடுத்து, தனது அருகில் அமர வைத்துள்ளார் கன்னியப்பன். சிறுமி வடை சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், எதிர்பாராத விதமாக கன்னியப்பன் அச்சிறுமியிடம் தவறான முறையில் பாலியல் அத்துமீறலில் (சீண்டலில்) ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து பயந்து ஓடித் தப்பித்துள்ளார்.
பெற்றோர் புகார் - போலீஸ் நடவடிக்கை:
வீட்டிற்குச் சென்ற சிறுமி, அழுதுகொண்டே தனக்கு நேர்ந்த துயரத்தை தனது தாயிடம் விவரித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், உடனடியாக கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை நடவடிக்கை:
சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருக்க முயன்ற முதியவர் கன்னியப்பனைப் பிடித்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து, போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் அவரைக் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
11 வயது சிறுமியிடம் முதியவர் ஒருவர் வடை வாங்கிக் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் மரக்காணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கான பாதுகாப்பு எங்கே..!- முதலமைச்சர் விஜய்க்கு இ.பி.எஸ் கேள்வி
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது. “தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?” சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும், தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்., இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. குழந்தை என்றும் பாராமல் இத்தகைய செயல்களில் மனித மிருகங்கள் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் விலகும் முன்பே நிகழ்ந்துள்ள இந்தக் கொடுமை குழந்தைகள் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் அரசு கூடுதல் கவனமும், அக்கறையும் காட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Before You Go
Iran US War: அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்! குறையும் பெட்ரோல் டீசல் விலை?ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
ட்ரெண்டிங் செய்திகள்





















