தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் வெப்பம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அத்துடன் அனல் காற்று வேகமாக வீசுகிறது. இந்தச் சூழலில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


இந்நிலையில் தமிழ்நாட்டில் நிலவும் வெப்பம் காரணமாக இருசக்கர வாகன ஓட்டுநர்கள் சற்று இளைப்பாற ஒரு வசதியை செய்து தரவேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் போட்டுள்ள ட்விட்டர் பதிவில், “வெயில் கொளுத்துகிறது. சிக்னல்களில் காத்திருக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் பரிதவிக்கின்றனர். அவர்கள் சற்றே இளைப்பாற போக்குவரத்து சிக்னலுக்கு அருகே இதுபோன்ற தற்காலிக நிழல் பந்தல்கள் அமைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யவேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.