விபத்தில்  கால்கள் முறிந்தாலும் நம்பிக்கையுடன்  பொதுத்தேர்வு எழுதும் மாணவி சிந்துவின் வாலிபால் விளையாட வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்ற தேவையான மருத்துவச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையைச் சேர்ந்த மாணவி சிந்து பல்வேறு உடல்நல போராட்டத்தை சந்தித்தும், நம்பிக்கையுடன் பொதுத்தேர்வு எழுதுவதில் பெருமிதம் கொள்கிறேன் என்றும், அவருடைய வாலிபால் விளையாடும் கனவை நிறைவேற்ற தேவையான மருத்துவச் செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என்றும் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டரில் கூறியிருக்கிறார்.


இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், வினைத்திட்பம் என்பதொருவன் மனத்திட்பம்!"கடுமையான நெருக்கடிகளின்போதுதான் ஒருவரின் மனவுறுதி வெளிப்படும்.


விபத்தில் கால் எலும்புகள் முறிந்தாலும் நம்பிக்கையும் கற்கும் ஆர்வமும் முறியாமல் தேர்வுகளை எழுதிவரும் மாணவி சிந்துவைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். தடைகள் வரினும் சோர்ந்து போகாமல் எதையும் முயன்று பார்க்கும் மனவலிமையை சிந்துவைப் பார்த்து மாணவர்கள் கைக்கொண்டு, தேர்வுகளைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும்! மீண்டும் வாலிபால் ஆடவேண்டும் என்ற சிந்துவின் ஆசையை நிறைவேற்றத் தேவையான மருத்துவச் செலவுகளை அரசே ஏற்கும்!” என்று குறிபிட்டுள்ளார்.






சென்னையைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சிந்து, கடந்த 2020ஆம் ஆண்டு எதிர்பாராத விதமாக அவர் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்துள்ளார். அந்த விபத்து அவருடைய வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது. அவருடைய பற்கள் அனைத்தும் விழுந்துள்ளது. அத்துடன் அவருக்கு கால், முகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக சுமார் 10 அறுவை சிகிச்சைகள் வரை அவருக்கு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.


இந்த விபத்திற்கு பிறகு அவர் முழுவதும் கட்டிலில் படுத்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் இவர் உதவியாளர் ஒருவரின் உதவியுடன் தேர்வை எழுத உள்ளார். இதற்கு கல்வித்துறை அதிகாரிகள் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தன்னுடைய விபத்திற்கு பிறகு சிந்து, “எனக்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் இனிமேல் அதற்கு சாத்தியமில்லை. எனவே நான் மறுபடியும் நடக்க தொடங்கினால் கைப்பந்து விளையாட்டை விளையாட வேண்டும்”  எனத் தெரிவித்துள்ளார்.


சிந்து குறித்து அவருடைய தந்தை சக்தி, “என்னுடைய மகள் அதிகமான நம்பிக்கை மற்றும் தைரியம் கொண்டவள். மருத்துவர்கள் அனைவரும் அவர் பிழைப்பது கடினம் என்று சொன்னார்கள். அப்போது என் மகள் என்னிடம் கூறியது ஒன்று தான். நீங்கள் கவலைப்படாதீர்கள் நான் விரைவில் குணம் அடைந்துவிடுவேன் என்று கூறினார். அதேபோல் வேகமாக உடல் நலம் தேறி வந்துள்ளார்” எனத்தெரிவித்துள்ளார்.


சிந்துவின் விபத்திற்கு பிறகு அவருடைய பள்ளி ஆசிரியர்கள் வாரத்திற்கு இருமுறை வீட்டிற்கு வந்து அவருடைய சந்தேகங்களை தீர்த்து வைக்கின்றனர். மேலும் சிந்துவின் சிகிச்சைக்கு சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆசிரியர்கள் கொடுத்து உதவியுள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை இக்கட்டான சூழ்நிலையிலும் சிந்து மனம் தளராமல் தேர்வு எழுத உள்ள பெரிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது