MK Stalin: ''மின்மினி பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம், நிலைத்து நிற்கும்'' - மு.க. ஸ்டலின்
கொள்கை அற்ற, கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது, சூரியன் தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், அக்கட்சியின் மறுசீரமைப்பு பிரதிநிதிகள் கூட்டம் வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக நடைபெற்றது. அதில் பேசிய அவர், தேர்தல் தோல்விக்கு என்ன காரணம் என ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று கூறினார்.
“பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிட மாட்டேன்“
இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நாட்டிலேயே முதன்முதலில் ஆட்சியை பிடித்த மாநிலக் கட்சி, சாதனைகள்பல படைத்த கட்சி எனும் பெருமை திமுகவிற்கு இருப்பதாக கூறினார். அதற்கு காரணம், அப்படியே தேங்கி விடாமல் காலத்திற்கு ஏற்ப நாம் அப்டேட், ஆகி அப்கிரேட் ஆவது தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வயது வரம்பு மற்றும் ஒருவர் அதிக முறை பதவியில் இரக்க முடியாது என்ற வரம்புகள் காரணமாக, பொறுப்புகளை இழப்பவர்கள் யாரையும் கைவிடமாட்டேன் என்று கூறிய அவர், அவர்கள் அனைவருக்கும் அவரவர் தகுதிக்கேற்ப வேறு பொறுப்புகளை வழங்க முடிவெடுப்பேன் என்றும் தெரிவித்தார்.
“பின்னடைவிற்கான காரணத்தை ஆராய்ந்து வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்“
தொடர்ந்து, மாற்றங்கள் நம்மிடம் இருந்து தான் துவங்க வேண்டும் என்று கூறி, திமுக 2.0-விற்கான பயணத்தை இப்போது நாம் துவங்கியிருக்கிறோம் என்று கூறிய அவர், சட்டசபை தேர்தலில் நமக்கு ஏற்பட்டபின்னடைவுகளுக்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து, வெற்றிப் பாதைக்கு நாம் திரும்ப வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும், “முதலில் கள ஆய்வை அனுப்பி நிர்வாகிகளிடம் கருத்து கேட்டோம். ஆன்லைனில் தொண்டர்களிடம் கருத்து கேட்டோம். அதில் வந்த கருத்துகள் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பின் மேறகொள்ளப்பட வேண்டிய சீரமைப்புகளை பரிந்துரை செய்ய, கட்சி மறுசீரமைப்புக் குழுவை அமைத்தோம். அந்தக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் செயற்குழுவில் பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தோம்.“ என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
“மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்.“
தொடர்ந்து பேசிய அவர், “அடித்தளம் வலிமையாக இருந்தால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும். வேர்கள் வலிமையாக இருந்தால் தான் ஆலமரம் உறுதியாக நிற்கும். அதுபோல், நம்முடைய கட்சி கட்டமைப்பு நம்மை தாங்கி நிற்கும்.“ என்று கூறினார். மேலும், “அந்த ஆணிவேரை பலப்படுத்தும் பெரும் பொறுப்பு உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை உணர்ந்து செயல்படுங்கள். கொள்கை அற்ற கட்டமைப்பு அற்ற கட்சிகள் வரும் போகும். மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம். நிலைத்து நிற்கும்.“ என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















