அரியலூர் மாவட்டத்தில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில்  வளர்ச்சி பணிகளை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.


செந்துறை ஊராட்சியில் வளர்ச்சிப்பணிகள்


அரியலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலை வகித்தார்.


அங்கன்வாடி மையங்கள் உட்பட வளர்ச்சித்திட்டங்கள்


தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் மற்றும் சாலைகள் அமைத்தல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல், பள்ளி உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதுல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.5.43 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்து, முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்தார்.


மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் பணி


அதன்படி, செந்துறை ஒன்றியம், கட்டையன்குடிகாடு கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினை  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார். பின்னர், செந்துறையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செந்துறையில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 


சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி தொடக்கம்


பின்னர் இருளர் காலனியில் அயோத்திதாச பண்டிதர் திட்டத்தின் கீழ் முதல் தெருவில் ரூ.4.96 இலட்சம் மதிப்பீட்டிலும், இருளர் காலனி இரண்டாவது தெருவில் ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டிலும், இருளர் காலனி மூன்றாவது தெருவில் ரூ.4.15 இலட்சம் மதிப்பீட்டிலும், இருளர் காலனி நான்காவது தெருவில் ரூ.3.84 இலட்சம் மதிப்பீட்டிலும், இருளர் காலனி ஐந்தாவது தெருவில்  ரூ.3.41 இலட்சம் மதிப்பீட்டிலும் சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து பணிகளை தரமான கட்டுமானப் பொருட்களை கொண்டு விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


இதையடுத்து சேடக்குடிகாடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், உஞ்சினி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.8.04 இலட்சம் மதிப்பீட்டில் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கும் பணியினை துவக்கி வைத்தார்.


நியாய விலை கடையை திறந்து வைத்தார்


தொடர்ந்து உஞ்சனி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் ரூ.12 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். அதன் பின்னர், உஞ்சினி ஊராட்சியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் உஞ்சினி-2 உணவு தானிய சேமிப்பு கிடங்கு (பொது விநியோக கடை) கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்தார். தொடர்ந்து உஞ்சினி ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.