அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்ய தான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுவதாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றம்சாட்டியுள்ளார். 


இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”திமுக ஆட்சி அமைத்த பிறகு இன்று ஒரே நாளில்  20 கோயில்களில் குடமுழுக்கும் நடைபெறுகிறது. அதில் 5 வைணவ திருக்கோயில்கள் அடங்கும். இதுவரையில் 1200 திருக்கோவிலில் குடமுழுக்கு நடந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் கோயில்களை பாதுகாக்கவும் முன்னோர்கள் விட்டுச்சென்ற சொத்தை காப்பாற்றும் வகையில் 100 கோடி ரூபாய் மானியமாக முதலமைச்சர் வழங்கியுள்ளார். கிராமப்புறத்தில் உள்ள சிறிய கோயில்களில் புணரமைப்பு பணிக்காக ரூ.1 லட்சம் உயர்த்தி தற்போது 2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று முதல் மேலும் 3 கோயில்களில் நாள்முழுவதும் அன்னதானம் திட்டம் துவங்கப்பட உள்ளது. அந்த வகையில் தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் முன்னிட்டு நாள் ஒன்றிக்கு 10 ஆயிரம் பேர் என 10 நாட்களுக்கு 1 லட்சம் பேருக்கு அன்னதானம் வழக்கம் திட்டமிட்டுள்ளோம். 


தமிழகத்தில் இன்று 2 ராமர் கோயிலில் குடமுழுக்கு நடைபெறுகிறது. அச்சகர்கள் எங்களுக்கு தோள் கொடுக்கும் தோழர்களாகவும், தெய்வத்திற்கு அடுத்தபட்சமாகவும் கருதுகிறோம். ஆன்மீகவாதிகளை 100 சதவீதம் துணை நின்று இருக்கும் ஒரு ஆட்சி என்றால் அது திராவிட மாடல் ஆட்சி தான். 


ஆளுநருக்கு சிகப்பு கம்பளம் விரித்து அனைத்து விதமான வரவேற்புடன் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 
 அரண்டவன் கண்ணுக்கு இருன்டதெல்லம் பேய் என்பது போல் ஆளுநருக்கு தோன்றுகிறதோ என்னமோ. கோயில் அர்ச்சகர்கள் எங்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ளார். 


எங்காவது வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டதா என சென்று பாருங்கள். அரசியல் கண்ணோட்டத்துடன் தான் மத்திய நிதி அமைச்சர் அணுகுகிறார். உபயதாரர்கள் நிதியில் தான் கோயில் பணிகள் நடைபெறும் உண்டியல் பணத்தில் நடைபெறாது என்ற அடிப்படை கூட தெரியாமல் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகிறார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லம் அருகே உள்ள கோபாலபுரம் திருக்கோவிலில் கூட LED திரை அமைக்கப்பட்டு ராமர் கோவில் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யபட்டு வருகிறது. திருக்கோவில் உள்ளே அன்னதானம், LED திரை அமைக்க எந்த தடையும் விதிக்கவில்லை. முறையான அனுமதி பெற வேண்டும் என்பது சட்டத்தில் உள்ளது. முறையான அனுமதி பெற்றால் எந்த தடையும் இல்லை. அரசியல் காரணத்திற்காக பாஜக அரசு இதனை செய்கிறது.


தமிழகத்தில் அரசியல் கலந்த ஆன்மீகத்தை செய்யவும் இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என தமிழக மக்கள் இடையே பொய் பரப்புரை மேற்கொள்ள தான் அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வளவு பெரிய ராமர் பிரதிஷ்டை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் தமிழகத்தில் இருப்பதாக”  குற்றச்சாட்டியுள்ளார்.