Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரியத்தில் நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டதாகவும், ஆள் சேர்ப்பும் உடனடியாக நடத்தப்பட உள்ளதாகவும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் அறிவித்துள்ளார்.

சென்னையில், மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், முதலமைச்சர் விஜய்யின் உத்தரவுப்படி, நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பதவி உயர்வுகள் இன்று வழங்கப்பட்டுள்ளதாகவும், புதிதாக 15 ஆயிரம் பேரை புதிதாக பணியில் சேர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
“300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது“
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார், மின் வாரியத்தில் இன்று மட்டும் 300 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடந்த 15 வருடங்களாக காத்திருந்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும் என உறுதியளித்தார்.
இதுபோன்ற பதவி உயர்வு 45 வருடங்களில் நடந்ததில்லை என்று சுட்டிக்காட்டிய அமைச்சர், நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வை தவெக அரசு வழங்கியிருப்பதாக தெரிவித்தார். கடந்த 15 வருடங்களாக பதவி உயர்வுக்காக அவர்கள் போராடி வந்ததாகவும், நீதிமன்றத்தின் ஆர்டர் வந்த பிறகும் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் இருந்ததாகவும், தவெக அரசு பொறுப்பேற்று, அவர்களுக்கு உரியதை செய்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், பணியிட மாற்றங்கள் நேர்மையாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
மின்வெட்டு பிரச்னைகளை சரிசெய்ய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் வேண்டுமென்றே சிலர் ஃபியூசை எடுத்துச் செல்வதாகவும், இரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டு சுமார் 40 நிமிடங்களில் சரி செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.
“15,000 ஊழியர்கள் உடனடியாக பணியமர்த்தப்படுவார்கள்“
மேலும், மின்வாரியத்தில் இன்றைய சூழலில் சுமார் 70,000 ஊழியர்கள் குறைவாக இருப்பதாகவும், அதில் முதற்கட்டமாக 15,000 பேர் இந்த வருடத்திற்குள் பணியமர்த்த உடனடி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மின்சார வாரியத்தை சீரமைக்கும் பணிகளை ஒவ்வொரு கட்டத்திலும் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், ஊழியர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய அனைத்தும் செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
“மின் துறை கடன் ரூ.2.5 லட்சம் கோடி“
தான் அமைச்சராகி ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், ஒரு ரூபாய் கூட தான் வாங்கிய இல்லை என்று கூறிய அமைச்சர் நிர்மல் குமார், இது மக்களுக்கான அரசு என்றும், மின்துறையில் உள்ள பிரச்னைகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
தான் பதவியேற்கும் போது, மின் துறையின் கடன் 1.5 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று நினைத்ததாகவும், ஆனால், 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இன்னும் சிறிது காலம் விட்டிருந்தால், கடன் மிகவும் அதிகமாகி, மின் வாரிய பங்குகளை தனியாருக்கு விற்று, அவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வந்திருக்கும் என்றும், சரியான நேரத்தில் தவெக அரசு பொறுப்பேற்று, அனைத்து தவறுகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















