ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சிஎம்டிஏ முறைகேடாக ஒப்புதல் வழங்குவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டிய நிலையில் அந்தப்புகாரில் உண்மையில்லை என அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார். 

அண்ணாமலை புகார்..

பாஜகவின் மாநில தலைமை அலுவலகமான தி,நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் பெட்டகத்தில் முறைகேடு நடத்திருப்பதாகவும், அதேபோல் ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவனத்திற்கு மட்டும் விதிகள் தளர்த்தப்பட்டு விரைவாக அனுமதி வழங்கப்படுவதாகவும் அண்ணாமலை குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

 

அமைச்சர் முத்துசாமி விளக்கம்

இந்நிலையில் ஜி ஸ்கொயர் தொடர்பான குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்தார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முத்துசாமி,'' சிஎம்டிஏவில் சி இ ஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டிருப்பதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. 1976ம் ஆண்டில் இருந்து சிஎம்டிஏவில் சி இஓ பதவி இருந்து வருகிறது. 40க்கும் அதிகமான ஐஏஎஸ் அதிகாரிகள் சி இ ஓவாக இருந்துள்ளனர். இப்படி இருக்கையில், சிஎம்டிஏவில் சிஇஓ பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது முற்றிலும் தவறானது. அதிமுக ஆட்சியில் கடைசி 2ஆண்டுகளாக அந்தப்பதவி நிரப்பப்படாமலிருந்தது. அதனை திமுக தற்போது நிரபியது. அதேபோல்  குறிப்பிட்ட நிறுவனத்திற்கு 3 நாட்களிலோ, அல்லது 6 நாட்களிலோ அனுமதி வழங்கப்படவில்லை’’ என்றார்.

சுகாதாரத்துறை விளக்கம்

முன்னதாக, சுகாதாரத்துறை தொடர்பான குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆவின் ஹெல்த் மிக்‌ஷ் என்பது குழந்தைகளுக்கான, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்துகள் அதில் இல்லை என்பதாலேயே தனியாரிடம் இருந்து அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிரம்பிய மகளிருக்கான பிரத்யேக ஹெல்த் மிக்‌ஷ் கொள்முதல் செய்யப்படுவதாக விளக்கம் அளித்தார்.அதோடு, அண்ணாமலை சொல்லிய இந்த குற்றச்சாட்டு என்பது அடிப்படை ஆதரமற்றது என்றும் இது அரசின் நற்பெயருக்கு களங்கும் விளைக்கும் முயற்சி என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றஞ்சாட்டினார். அதேபோல், பொருட்களின் தரம் மற்றும் சரிபார்ப்பே இன்னும் முடிவடையாதபோது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை இயக்குநர் உள்ளிட்டோரும் பொருட்கள் வாங்கப்படும் விவரங்கள், கருத்துருக்கள் என எல்லா விவரங்களும் வெளிப்படையாக இருப்பதகாவும் தெரிவித்தனர். ஆவின் உள்ள ஹெல்த் மிக்‌ஷில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் அவற்றின் விலை, தனியார் நிறுவனத்திடம் பெறப்படும் ஹெல்த் மிக்‌ஷ்னின் விலை மற்றும் அதன் உள்ளீட்டு பொருட்கள் என அத்தனை குற்றச்சாட்டுக்கும் அடுக்கடுக்கான விளக்கங்களை இருவரும் செய்தியாளர் சந்திப்பில் தந்தனர்.