கோவை அரசு மருத்துவ கல்லூரி மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா, கோவை இஎஸ்ஐ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கினை அணிவித்து சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு முதலிடத்தில் இருந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் அதிக அளவில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர்கள் பயின்று வருகின்றனர். 


கோவையில் மருத்துவ துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மருத்துவ மனைகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன். தமிழக முதலமைச்சர் டெல்லியில் உள்ள கழக அலுவலகம் திறப்பதற்கு சென்ற போது, அங்குள்ள ஆம் ஆத்மி மருத்துவ மனையை  பார்வையிட்டார். அந்த  கட்டமைப்பை பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயனடைய வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து தமிழக முழுவதும் 708 மருத்துவமனைகள்  கட்ட உத்தரவிட்டார். அதில் ஒரு மருத்துவர்,  ஒரு செவிலியர், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். 




தமிழகத்திலேயே கோவை மாவட்டத்திற்கு 72 மருத்துவமனைகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 மருத்துவமனைகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 708 மருத்துவமனைகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில மருத்துவமனைகள் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது. மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை  முதலமைச்சர் பிப்ரவரி 6-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியகாரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. 


கோவை இஎஸ்ஐ மருத்துவ மனையில் கடந்த ஆண்டுகளில் 400  புற நோயாளிகள்  வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவ மனையில் 4000 ஆக உயர்ந்துள்ளது. இன்னுயிர் காப்போம் நம்மை காப்போம் திட்டத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு  ரூ. 56 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 மருத்துவமனைகளில்  அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும். விபத்து ஏற்பட்ட வரை மருத்துவ மனையில்  அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்க தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்காக தமிழில் பாடநூல்கள் வெளியிடப்பட உள்ளது. காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளது.


மேலும் உள்ள காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது. வரும் 2-ந் தேதி தமிழக முதல் அமைச்சர் 787 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். காசநோயாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். குட்கா மீதான தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு போதை பொருட்களை தமிழகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுகிறேன்.  குட்கா மீது தடை விதிக்க மேல்முறையிடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்” எனத் தெரிவித்தார்.