திருப்பத்தூரில் திமுகவின் பிரமாண்ட மாநாட்டிற்கு அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? - அமைச்சர் எ.வ.வேலு சொல்வது என்ன?
எடப்பாடி பழனிசாமியின் ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை குறித்த விமர்சனத்திற்கு சட்டமன்றத்தில் பதில் அளிப்பேன் என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

திருப்பத்தூர்: ரூ.5000 மகளிர் உரிமைத்தொகை குறித்த எடப்பாடி பழனிசாமி குறித்த விமர்சனத்திற்கு சட்டமன்றத்தில் பதில் கொடுப்பேன் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் நடைபெற உள்ள திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு பயிற்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகளை அமைச்சர் எ.வ.வேலு செய்தார். ஜோலார்பேட்டையில் அனைத்து துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ் வாங்கி மாநாடு நடைபெறுகிறது என அவர் தெரிவித்தார்.
அரசு என்பது வேறு அரசியல் என்பது வேறு
இதுதொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது பேசுகையில், “ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடியில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டிற்கு, கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் தேதியே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் அனுமதிகோரப்பட்டது. அதன்படி காவல்துறையினரின் 17 நிபந்தனைகள் படி, 45 ஏக்கரில் பயிற்சி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், அரக்கோணத்தில் தொடங்கி சேலம் மாவட்டத்தில் உள்ள 47 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 1 லட்சத்து 50 ஆயிரம் BLA2, BLC, BDA நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர் மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்களுக்கு, 6 லட்சம் தண்ணீர் பாட்டில்கள், பல்வேறு சிற்றுண்டிகள், சத்தாண உணவுகள் அடங்கிய பைகள் தொகுதிவாரியாக வழங்கப்பட உள்ளது. 400 மொபைல் கழிவறைகள், தனியாரிடம் அனுமதி பெற்று 160 ஏக்கரில் 7 இடங்களில் வாகனங்கள் நிறுத்தும் இடம், மாநாட்டிற்கு வருகை புரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க தற்காலி மருத்துவமனை, 25 மருத்துவர்கள், 50 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்” என்றார்.
மேலும், அரசு என்பது வேறு அரசியல் என்பது வேறு என அனைத்து துறை அதிகாரிகளிடம் தடையில்லா சான்றிதழ்களை வாங்கிதான் இந்த மாநாட்டை நடத்துகின்றோம், தலைவரை பார்த்த உத்வேகத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலில் தீவிரமாக உழைப்பாளர்கள் எனப்பேசினார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அங்கு பதிலளிப்பேன்
மேலும் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை 5000 ரூபாய் குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சன கேள்விக்கு, அவர் எதிர்க்கட்சித் தலைவர் அப்படி இருக்கும்போது அவர் பாராட்டவா போகிறார், அவருக்கு நான் சட்டமன்றத்தில் பதிலிக்கின்றேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு என்பது வருத்தம் அளிக்கிறது. 26 ஆண்டு களமாக மாவட்ட செயலாளராக உள்ளேன். மீண்டும் திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெரும், முதலமைச்சர் தான் மீண்டும் 2026 அரியணையில் ஏறப்போகிறார்.அதிமுக மனரீதியாக பொருந்தாத கூட்டணியாக உள்ளது. திமுக பொறுத்த மட்டும் எஸ்ஐஆர் படிவம் முழுமையடையாமல் உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் வழங்கப்படும் என முடிவெடுத்த பின்னர் விருப்ப மனு பெறப்படும்” எனத் தெரிவித்தார்.























