உயர் சிறப்பு மருத்துவ இட ஒதுக்கீடு.. நீங்க பண்ணது மறந்து போச்சா? - உதயநிதிக்கு அருண்ராஜ் பதிலடி!
நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜயின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் தவெக அரசின் அலட்சியம் காரணமாக பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது. அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும். அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என நேற்று தெரிவித்திருந்தார்.
அமைச்சர் அருண்ராஜ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், “உயர் சிறப்பு மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும் மீதமுள்ள இடங்கள் இந்திய அளவிலான இடத்திற்கும் ஒதுக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் மாநில ஒதுக்கீட்டில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் இந்திய அளவிலான இடங்களுக்கு சரண்டர் செய்யப்பட்டது என்பதை எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
அறிவாரா? நாம் சரண்டர் செய்த பிறகு, கட் ஆஃப் குறைக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நமக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் இந்திய அளவிலான தகுதி பட்டியல் மூலம் நிரப்பப்பட்டதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிப்படைந்தனர் என்பதையும் அவர் அறிவாரா?
2024-ல், 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் இந்திய அளவிலான இட ஒதுக்கீட்டு பிரிவுக்கு சரண்டர் செய்யப்பட்டன என்பது வரலாறு. தங்கள் கடிதத்தில் சென்ற 2025 ஆண்டில் நிரப்பப்படாமல் இருந்த 152 இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வது தடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைக்கு புறம்பான செய்தி.
ஆனால் இந்த ஆண்டு, மாநில இட ஒதுக்கீட்டில் 151 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தபோதும், முதலமைச்சர் ஜோசப் விஜய்
தலைமையிலான தமிழக அரசு அவற்றை சரண்டர் செய்ய மறுத்து, இது தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் உரிய முறையில் வாதங்களை முன் வைத்தது. ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கட் ஆஃப் சதவீதத்தைக் குறைப்பது பற்றிய முடிவு பின்னர் எடுக்கப்படும் என்ற வாதத்தை வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தனது 29.05.2026 நாளிட்ட தீர்ப்பில் 151 இடங்களை சரண்டர் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. நம் மாநில தொகுப்பிற்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் தமிழ்நாட்டு மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட வேண்டும் என்பதே முதலமைச்சர் விஜயின் தலைமையிலான தமிழக அரசின் உறுதியான நிலைப்பாடு. எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, நம் மருத்துவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மறுசீராய்வு மனுவினை உடனடியாக 04.06.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதிலும், நம் மாநில உரிமை சார்ந்த இட ஒதுக்கிடு நிலைப்பாட்டிலும் தமிழக வெற்றிக் கழகம் எப்பொழுதும் உறுதியுடனும், துரிதமாகவும் செயல்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்





















