எங்களை அடித்துக்கொண்டே இருந்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். அரசியல் ரீதியாக எதிர்வினையாற்றுவோம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கொந்தளித்துள்ளார். 

Continues below advertisement

ஜூன் 23ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜயின் சைகை மற்றும் பேச்சு, அதனைத் தொடர்ந்து அவரின் பேச்சுக்கு திமுக ஆற்றிய எதிர்வினை ஆகியவை கடும் சர்ச்சைகளாகவும் பேசுபொருளாகவும் அமைந்துள்ளது. முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போல  பேசியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

அதற்கு, “நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளை திருமாவளவன் பார்க்க வேண்டும். முதலமைச்சர் விஜயைப் பற்றி என்ன மாதிரியான அவதூறு சொற்கள் சொன்னார்கள் என்பதை பாருங்கள். அதற்கு முதலமைச்சர் எதிர்வினையாற்றினார். என்னைப் பேசு பேசு சொல்கிறீர்கள். நான் பேசியதும் என்ன நடந்தது என கேட்டார். கொளத்தூர் ஒன்றும் தமிழ்நாட்டில் இல்லாத வார்த்தை கிடையாது. ஏன் அதைப் பற்றி சட்டசபையில் பேசக்கூடாதா?.. நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை. ஆனால் எங்கள் மீது விமர்சனம், தாக்குதல் நடத்தும்போது அரசியல் ரீதியாக தனிப்பட்ட பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். 

Continues below advertisement

எங்களை அடித்துக்கொண்டே இருப்பார்கள். நாங்கள் அமைதியாகப் போகவேண்டுமென்ற பண்ணையார்த்தன அரசியலுக்குள் நாங்கள் இருக்க மாட்டோம். மரபுப்படி நாங்கள் நடந்து வருகிறோம். திமுக முன்வைக்கும் போலி பிரச்சாரங்களுக்கு நாங்கள் பதில் சொல்வோம். அப்படித்தான் முதலமைச்சர் விஜயும் பதில் சொன்னார். அப்போது திமுகவினர் அமைதியாக எழுந்து சென்று விட்டனர். கட்சி நிதி என்ற வார்த்தை மட்டும் தான் சொன்னார். அவர் எந்த கட்சியையும் குறிப்பிடவில்லை. கடந்த திமுக ஆட்சியில் துறை ரீதியாக திட்டம் கொண்டு வருவதுபோல ஊழலுக்கு திட்டம் போட்டுள்ளார்கள். இந்த துறைக்கு இவ்வளவு சதவிகிதம் ஊழல் செய்ய வேண்டும் என்று இருந்தது.

தவெக ஆட்சியில் அதனையெல்லாம் ஒழிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பொதுமக்களுக்கும் தெரியும். இதனை சட்டரீதியாக நிரூபிப்பார்கள். ஆனால் மக்கள் மன்றத்தில் போன அரசு எப்படி இருந்துச்சு, என்னோட அரசு எப்படி இருக்கும் என நேரலையில் தான் தெரிவித்தார். மக்கள் பணத்தை தொட மாட்டோம் என்ற துணிச்சல் விஜய்க்கு இருக்கிறது. திமுகவினர் எழுந்து குரல் கொடுத்தபோது சபாநாயகர் வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிக்கு பேச வாய்ப்பளிப்பதாக சொன்னார். 

இதையும் படிங்க: TVK DMK: தவெக MLA-க்களுக்கு ஸ்கெட்ச் போட்ட திமுக..! உளவுத்துறை ரிப்போர்ட், சோதனை மூலம் ஷாக் தந்த CM விஜய்

ஆனால் திமுக அதைப் பற்றி பேச நேர்மையும், துணிச்சலும் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை. அதை சட்டப்பேரவையில் அவர் பேசியிருக்கலாம். 32 துறைகளில் தலா 16 துறைகள் சபரீசனுக்கும், உதயநிதிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. தவெக ஆட்சியில் மாற்றங்கள் வந்திருக்கிறது. தனிப்பட்ட தாக்குதல்களை தேர்தலில் திமுக காட்டியதால் தான் தோற்றது. நாங்கள் மக்களுக்கான அரசியலை செய்கிறோம்” என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.