Mazagon Dock: ரூ.29,000 கோடி திட்டத்தை தாரை வார்த்த திமுக - தூத்துக்குடி இழந்த மெகா திட்டம், நடந்தது என்ன?
Mazagon Dock Thoothukudi: கடந்த திமுக அரசின் செயல்பாடுகளால் தூத்துக்குடிக்கு வரவிருந்த சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, முதலீட்டு திட்டம் ஆந்திராவிற்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Mazagon Dock TN Govt: தமிழ்நாட்டிற்கு வரவிருந்த 29 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு திட்டம் ஆந்திராவிற்கு சென்றது எப்படி என கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா செல்லும் ரூ.29,000 கோடி முதலீடு
இந்தியாவின் பிரதான கப்பல் கட்டும் பொதுத்துறை நிறுவனமான மசாகன் டாக் லிமிடெட், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரமாண்ட க்ரீன் ஃபீல்ட் துறைமுகம் அமைக்க திட்டமிட்டு இருந்தது. இதற்காக மாநில அரசுக்கான ஒப்புதலுக்கு காத்திருந்த நிலையில், எந்தவித சமிக்ஞையும் கிடைக்காததால் அந்த முதலீட்டை ஆந்திராவிற்கு திருப்ப அந்நிறுவனம் பரிசீலித்து வருகிறதாம். கடந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்த நிறுவனத்திற்கும், கொச்சின் ஷிப்யார்ட் மற்றும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அடுத்த 10 முதல் 12 ஆண்டுகளில் சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 50 ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதுவும் 3,00,000 DWT திறன் கொண்ட மிகப் பெரிய கப்பல்களை கட்டமைக்கும் திறன் கொண்ட இந்த திட்டம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பிற்கும், மாநில பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆந்திராவிற்கு திரும்பும் முதலீடு
15 ஆயிரம் கோடி முதல் 18 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலாஅன் முதலீட்டிற்கான நிர்வாக ஒப்புதலையும் மசகான் டாக் நிறுவனம் பெற்று, மாநில அரசின் சமிக்ஞைக்காக காத்திருந்துள்ளது. இந்நிலையில் தான் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக அரசு உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல், முக்கியத்துவம் வாய்ந்த இந்த கப்பல் கட்டுமான தளம் தொடர்பான திட்டத்திற்காக வெளிநாட்டு நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மசகான் டாக் நிறுவனம் தனது முதலீட்டை வேறு மாநிலத்திற்கு மாற்றும் பணியில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உள்நாட்டு தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான இந்த திட்டத்திற்கு, மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியங்களை வழங்கவிருந்தன. இத்தகைய திட்டப் பணிகளை ஏலத்தில் எடுப்பதற்கான வாய்ப்புகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு வழங்காமல், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசு வழங்கியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தத் திட்டத்தை கைப்பற்ற முடியாமல் போனதை தொடர்ந்து மசகான் டாக் நிறுவனம், தற்போது ஒரு மாபெரும் கப்பல் கட்டுமான தளம் திட்டத்திற்காக 29,000 கோடி ரூபாய்க்கு மேல் ஆந்திராவில் முதலீடு செய்ய பரிசீலித்து வருகிறதாம்.
திமுக அரசு செய்தது என்ன?
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தால் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, புதிய கப்பல் கட்டும் தளங்களை மேம்படுத்துவதற்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு 19 நாட்களுக்கு முன்பாகவே அதாவது டிசம்பர் 7ம் தேதி அன்று மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் தென்கொரியாவின் HD Hyundai நிறுவனத்துடன் தமிழக அரசு பிரத்யேக ஒப்பந்தம் மேற்கொண்டது. இதற்கான முதலீட்டின் மதிப்பீடு 2 முதல் 4 பில்லியியன் அமெரிக்க டாலர்கள் என கூறப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி துறைமுகம் மற்றும் சிப்காட் இணைந்து அமைக்கும், மெகா கப்பல் கட்டுமான பூங்காவிற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் அறிவித்துள்ளது. எந்த ஏல நடைமுறையும் இல்லாமல், விதிகள் உருவாக்கப்படுவதற்கு முன்பே வெளிநாட்டு நிறுவனத்தை 'ஆங்கர் இன்வெஸ்டர்' என தேர்வு செய்தது எப்படி என தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.
திமுகவை சாடும் தவெக
தமிழ்நாட்டின் பல்வேறு வளர்ச்சிக்கான திட்டங்களை, கமிஷனுக்கு ஆசைப்பது திமுக தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்த்துவிட்டதாக தவெகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஏராளமான அரசு மானியங்களுடன் செயல்படுத்தக்கூடிய திட்டத்திற்கு, உரிய முறையில் ஏலம் எதையும் பின்பற்றாமலும், அரசு நிறுவனத்திற்கு வாய்ப்பளிக்காமல், தனியாருக்கு வாரி வழங்குவதில் அவ்வளவு வேகம் காட்டியது ஏன்? இயற்கையாகவே வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தாலும், திமுகவின் கமிஷன் ஆசையால், மிகப்பெரிய முதலீடு ஒன்றை தூத்துக்குடி தற்போது இழந்துள்ளது எனவும் குற்றம்சாட்டி வருகின்றனர். தமிழக இளைஞர்களுக்கு உருவாகவிருந்த பல்லாயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளும், பொருளாதார வளர்ச்சியும் பறிபோய்விட்டது எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்























