மாயனூர் கதவணைக்கு வரும் தண்ணீர் வரத்து வினாடிக்கு, 1.31 ஆயிரம் கன அடியாக இருந்தது. கரூர் மாவட்டம், மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து, 528 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 31 ஆயிரத்து, 728 கன அடியாக தண்ணீர் வரத்து சரிந்தது. டெல்டா பாசன பகுதிக்கு குருவை சாகுபடிக்காக, காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 30 ஆயிரத்து, 508 கன அடி தண்ணீரும், நான்கு வாய்க்காலில், 1,220 தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.




திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,765 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 1,725 கன அடி தண்ணீர் மட்டும் திறக்கப்பட்டது. கரூர் அருகே பெரியாண்டாங் கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 2,446 கன அடி தண்ணீர் வந்தது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஷட்டர்கள் மூலம், 9 கன அடி தண்ணீர் வெளியேறியது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 87.47 அடியாக இருந்தது.




திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், காலை நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம் 33.33 கனஅடியாக இருந்தது.




கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 63 கன அடி தண்ணீர் வந்தது.  26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 25.25 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில், வினாடிக்கு, 88 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.




மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட வெள்ள நீர் ஊருக்குள் போகாமல் இருக்க தடுப்புகள் அமைப்பு


மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட வெள்ளநீர் ஊருக்குள் போகாமல் இருக்க தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையான நொய்யல் வழியாக தவட்டுப்பாளையம் காவிரி ஆற்று பாலம் அருகே வந்து சேர்ந்தது. குறைந்த அளவில் அதிக வேகமாக வந்த தண்ணீரின் அளவு படிப்படியாக உயர்ந்து தவித்துப்பாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதி வரை சென்றது. அதிகாரிகள் மண் திட்டு அமைத்து தண்ணீர் குடியிருப்புப் பகுதிகளுக்குள் செல்லாமல் தடுத்தனர். காவேரி ஆற்றின் இரு கரையையும் தொட்டுச் செல்வதால் கடல் போல் காட்சி அளித்தது. நன்செய் புகலூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு வரும் நிலையில் கதவனை கட்டுவதற்காக காவேரி ஆற்றின் குறுக்கே நன்செய் புகலூர் முதல் நாமக்கல் மாவட்டம் அனிச்சம் பாளையம் கதவணை கட்டுவதற்கு போடப்பட்டிருந்த காங்கிரட்டில் உள்ள கம்பிகள் மூழ்கி சிறிது அளவு கம்பிகள் மட்டுமே தெரிந்தது.




காவிரி ஆற்றில் சுமார் 1 1/4 லட்சம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் கரூர் - சேலம் செல்லும் பழைய காவிரி ஆற்றுப் பாலத்திலும் சேலம் - கரூர் செல்லும் புதிய காவிரி ஆற்றுப் பாலத்திலும் அந்த வழியாக காரில் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள், தங்களது வாகனங்களை காவிரி ஆற்றுப் பாலத்தில் நெடுகிலும் நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் காவிரி ஆற்றுப் பாலத்தில் நின்று செல்பி எடுத்தும், அதிசயத்துடன் பார்த்தும் செல்கின்றன.


இந்நிலையில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாலும், மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூட வாய்ப்புள்ளது. இதனால், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் காவிரி ஆற்றுக்கு செல்லும் வழித்தடத்தில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.